Friday, May 4, 2012

சூறையாடப்படும் சிறுவர் உரிமைகள்!


தமிழர் தாயகப் பகுதி எங்கும் தற்போது சீரழிவுகள் உச்சம் பெற்றுள்ளன. ஆரம்பகாலத்தில் பிள்ளைகள் பெற்றோரின் அனுமதியைப் பெற்றே எந்த ஒரு காரியத்தையும் செய்வார்கள். ஆனால், தற்போது அங்கு நிலைமை மாறியுள்ளது. பெற்றோரை, பெரியோரை மதிக்கும் பண்பு பிள்ளைகளிடம் குறைவடைந்து வருகின்றது என பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல பிள்ளைகள் பெற்றோரை மிரட்டி தமது காரியங்களை சாதித்து வருகின்றனர். இதற்கு தற்போதைய சூழ்நிலையே காரணமாக அமைகின்றது. சரியான வழிநடத்தல் இன்மையும் மற்றொரு காரணம்.
பெற்றோர் பிள்ளைகளை சற்றுக் கண்டிக்க முனைந்தால் நேரடியாகவே அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முன்வருpன்றனர். பலர் தற்கொலையும் செய்கின்றனர். இதற்கு அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டமையும் ஒரு காரணமாக உள்ளது.
இவ்வாறே கடந்தவாரம் நெல்லியடிப் பகுதியில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.  உயர்தரப் பரீட்சைக்கு படிக்குமாறு பெற்றோர் அதட்டியதால் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 நெல்லியடி கிழக்கு கரவெட்டி சாமியார் அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவனான 19 அகவையுடைய நடராஜா கஜமுகன் என்ற மாணவனே நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் யாழ்குடாநாடு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் அதிகளவில் இடம்பெறுகின்றன.
இதனால் பெற்றோர் பிள்ளைகளைத் தண்டிக்க மன்வருவதில்லை. இது அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. பிள்ளைகள் தவறுகளை துணிந்து செய்கின்றனர். மாணவர்களின் இவ்வாறான பாதிப்புகள் குறித்து சிங்களம் எதுவித கவலையும் இன்றி தமிழ் மக்கள் சீரழியக் கூடிய வழிகளை மேலும் மேலும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
இவ்வாறான காரணங்களால் இளவயதுப் பிள்ளைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கிளிநொச்சியில் அண்மைக் காலத்தில் கருச்சிதைவுகள் காரணமாக இளம் கர்ப்பிணிப் பெண்கள் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை  கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரான லாக்சன் ரஜனிதேவி (வயது27) என்ற இளம் கர்ப்பிணி பெண்ணே மரணமார். இந்த இளம்பெண் 3 மாதக் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் சட்டத்துக்கு முரணான வகையில் வீட்டிலேயே கருக்கலைப்பை மேற்கொண்டுள்ளார். இதனால் அதிக அளவான இரத்தப்போக்கு ஏற்பட்டது எனவும் இவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே, யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான 5 மாதங்களுக்குள் பதினெட்டு வயதுக்குட்பட்ட 75 பிள்ளைகள் திருமணமாகாமலே கர்ப்பம் தரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான சம்பவங்களில் பாடசாலை மாணவிகளே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இவ்வாறான தவறான வழிக்குச் செல்வதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களுமே காரணம் எனவும், பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாகவோ, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவோ இவர்கள் போதிப்பதில்லை எனவும் அவர் கூறினார்.
இணையத்தளம் மற்றும் குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) மூலம் பாலியல் தொடர்பான தவறான தகவல்களைப் பெற்று அவற்றை நடைமுறையில் அணுக முற்படுவதனாலேயே இவ்வாறான பாரதூரமான விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இளவயதுக் கர்ப்பங்களைத் தடுப்பதற்கான செயற்திட்டம் கடந்தவாரம் தம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வைத்தியர், முதற்கட்டமாக பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களுக்குச் செயலமர்வை ஆரம்பித்துள்ளதாகவும், இதன்போது மாணவர்களுக்கு வாழ்க்கைத் தேர்ச்சிப் பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலும் 65 சிறுவர் தொழிலாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை, 414 சிறுவர்கள் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளனர் என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப் பகுதியில் 253 சிறுவர்கள் பாடசாலையைவிட்டு இடை விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளே இவற்றுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகின்றது. குடும்பப் பிரச்சினைகளாலேயே பெருமளவான சிறுவர்கள் கைவிடப்பட்டுள்ளனர். இவர்கள் தமது உறவினர்களுடன் அல்லது பராமரிப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
இவ்வாறே கடந்தவாரம் கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில், வீதியில் நின்றதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 9 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டான்.
 யாழ்ப்பாணத்திலுள்ள சான்றிதழ் பெற்ற சிறுவர் காப்பகத்தில் இணைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களுக்கு இராணுவ அடக்குமுறைக்குள் தமிழ் மக்களின் கலாச்சாரம், பண்பாடுகள் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்படுவதே காரணமாக அமைகின்றது.
 இவ்வாறான நிலைமைகளில் சிறுவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களின் பாதைகள் எங்கே செல்லும்? விடை உங்கள் ஒவ்வொருவரின் மனங்களிலும் தான். புலம்பெயர் எம் உறவுகளே சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!! 
(சூறையாடல்கள் தொடரும்)


.

No comments: