Friday, May 4, 2012

யாழ்.குடாவில் அதிகரிக்கும் அகால மரணங்கள்!




யாழ்.குடாவில் இடம்பெற்றுவரும் சமூக சீரழிவுகள் குறித்து பலதடவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். ஆயினும் யாழ்.குடாவில் சமூக சீரழிவுகள் இன்னும் தொடர்ந்து இடம்பெற்றுவருவாதக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த நத்தார் தினத்தன்று (25.12.2011) இளைஞர்கள் கும்பல் ஒன்று யாழ்.பேருந்து தரிப்பிடத்தில் நீண்ட நேரம் நின்று, அங்கே வீதியால் வந்த பெண்களுடன் தகாதமுறையில் நடந்துகொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பேருந்து தரிப்பிடத்தில் நீண்டநேரமாக இளைஞர்கள் கும்பல் ஒன்று தொலைபேசிகளுடன் நின்றதாகவும், அங்கு வரும் பெண் பிள்ளைகளிடம் தகாத வார்த்தைகள் பேசியதுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாகவும் அவர்கள்  குறிப்பிட்டனர்.

இளைஞர்களின் இந்த நடவடிக்கையால் பாதிக்கபட்ட பெண் ஒருவர் யாழ்.பேருந்து நிலைய அலுவலகத்தில் முறையிட்டதை அடுத்து, இந்த இளைஞர் கும்பல்; கலைந்துசென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இளைஞர்கள் வீதிகளில் கூடிநின்று கதைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மீறி வீதிகளில் கூடிநிற்போர் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் கோப்பாய் காவல்துறைவட்டாரங்கள் தெரிவித்துள்ளதான தகவல்கள் வெளியாகியபோதும், இளைஞர்களின் அட்டகாசம் தொடர் கதையாகவே இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டில் தற்கொலை மரணச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணத்தில் நடப்பாண்டு 36 தற்கொலையால் ஏற்பட்டுள்ள மரணச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ். பொது மருத்துவமனை மரணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலத்தினை விடவும் இத்தற்கொலை சம்பவம் அதிகரித்திருப்பதற்கு காரணமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகமாக யாழ்ப்பாணம் முழுமையாக மாறியிருப்பதும் தற்கொலை சம்பவங்களுக்கு ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தகாலபோரின்போது ஏற்பட்ட வடுக்கள் குறிப்பாக உயிரிழப்பு, அங்கவீனம், தடுப்பு முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், காணமல்போனவர்கள், யுத்தத்தின் இதுவரையும் உறவினர் இறந்தார்களா இல்லை படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்று விடை தேட முடியாத உறவுகள் போன்றவர்கள் இன்றும் போரின் கொடூரத்தில் இருந்து மீளவில்லை.

இத் தற்கொலைச் சம்பவங்களிற்கு பெரும்பாலும் தாங்கமுடியாத அதிர்ச்சி, மன அழுத்தம், விரக்தி, வாழ்க்கையில் நம்பிக்கை இன்மை, குடும்பப் பிணக்கு, எதிர்கால வாழ்வில் நம்பிக்கை இன்மை போன்றவையே காரணமாக அமைந்துள்ளன. யாழ் பொது மருத்துவமனையின் தற்கொலை மரணங்கள் தொடர்பாக பதிவுகளில் இதுவரை 12 ஆண்களும், 24 பெண்களும் தற்கொலை செய்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்.குடாவில் சிசு மரணமும் அதிகரித்துள்ளது. யாழ். இளவாலை மார்ஷன் கூடல் பகுதியிலுள்ள பற்றைக் காட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் சிசு ஒன்றின் சடலத்தை நேற்று திங்கட்கிழமை பகல் மீட்டுள்ளதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் விறகு வெட்டச் சென்றவர்கள் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிசு சிறிய பை ஒன்றில் பொதி செய்யப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகவும் குறைமாதத்தில் பிறந்த சிசுவாக இது இருக்கலாம் எனவும் காவல்துறைனர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிசுவின் சடலம் இளவாலை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இதற்கு இளவயதுக் கர்ப்பமும் காரணமாக உள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறே, மன்னார் மாவட்டத்திலும் தலைதூக்கும் கலாச்சாரச் சீரழிவுகளை தடுத்து நிறுத்துமாறு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் கீரித்தாழ்வுபாட்டுக் கடற்கரை ஓரங்களில் கலாசார சீர்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொழுதைக் கழிப்பதற்காக எந்த விதமான இடங்களும் காணப்படவில்லை.

இதனால் மக்கள் மாலை நேரங்களில் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் பல்வேறு விடயங்களிலும் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் பொழுதைக் கழிப்பதற்காக மன்னார் பிரதான பாலத்தடி மற்றும் மன்னார் கீரிதாழ்வுபாடு கடற்கரைப் பகுதி ஆகியவற்றுக்குச் சென்று வருகின்றனர். இவர்கள் குடும்பம் குடும்பமாக அங்கு சென்று பொழுதைக் கழித்துவிட்டு வருகின்றனர். ஆனால் இளைஞர்,யுவதிகள் பலர் இவ்விடங்களுக்கு வந்து நடந்து கொள்ளும் விதமோ வித்தியாசமானது.

அண்மைக்காலமாக மன்னார் பாலத்தடிப் பகுதியில் குறிப்பிட்ட சில இளைஞர், யுவதிகளின் நடவடிக்கைகள் நாகரிகமற்ற முறையில் காணப்படுகின்றன. குடும்பத்துடன் வருபவர்களையும், பார்ப்பவர்களையும் முகம் சுழிக்கச் செய்யும் விதத்தில் சில இளைஞர், யுவதிகள் நடந்து கொள்கின்றனர்.

முன்னர் ஊடகங்கள் மூலம் இந்தப் பிரச்சினை வெளிக் கொண்டுவரப்பட்டபின் சம்மந்தப்பட்டவர்கள் செயற்பட்டு குறித்த பிரச்சினையைக் கட்டுப்படுத்தினர். குறித்த பிரச்சினைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அதிகரித்து காணப்பட்டது. ஆனால் தற்போது குறித்த கலாசாரச் சீரழிவுகள் மன்னார் கீரி தாழ்வுபாடு கடற்கரையோரங்களில் அதிகரித்து காணப்படுவதாக கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். மன்னார் நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இந்தக் கடற்கரைப் பகுதிகளுக்கு அதிகமான இளைஞர், யுவதிகள் பொழுது போக்கில் அப்பகுதியில் உள்ள பற்றைக் காடுகளிலும் நடந்து கொள்கின்றனர்.

 மன்னாரில் உள்ள அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்த முற்படுகின்றபோதும் அது பயனற்றுப் போயுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.  இதனைத் தடுப்பதற்கு உரியவர்கள் தான் வரவேண்டும் பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால், எமது மக்களின் எதிர்காலம் கேள்விக்குரியதே!

புலம்பெயர்வாழ் தமிழ் மக்களே இது சிந்திக்கும் நேரமல்ல சிந்தித்து செயற்படும் நேரம்.

(சூறையாடல் தொடரும்)

No comments: