Sunday, July 29, 2012

விளையாட்டாய் வந்த வினை!

தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களத்தின் திட்டமிட்ட பரம்பல் ஆமை வேகத்தில் ஆரம்பித்து இன்று முயல் வேகத்தில் செல்கின்றது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த சிங்கள ஓநாய் இறுதியில் தமிழ் மொழியையே விழுங்க ஆரம்பித்துள்ளது. இனி இலங்கையின் எப்பாகத்திலும் சிங்களத்திற்கே முதலிடம் என்ற மமதையில் சிங்களம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
அதாவது, யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக அரச சார்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வருகை தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றுடன் இணைந்து சிங்கள மொழியும் அங்கு அதன் ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. யாழ்.குடாநாட்டில் முக்கிய இடங்களில் இருக்கின்ற அரச நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் சிங்கள மொழியே முதன்மை மொழியாக காணப்படுகின்றமை அங்கு தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.
அத்துடன், யாழ்.குடாவிற்கு புலம்பெயர் மண்ணில் இருந்து நீண்டகாலத்திற்குப் பின்னர் விடுமுறையில் செல்லும் பலர் இந்தப் பெயர்ப்பலகைகளைக் கண்டு கொதித்துப் போயுள்ளனர். யாழ். குடாநாடானது வட கிழக்கு மாகாணங்களில் அதிகமான தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியாகும். ஆனால் இங்கு வைக்கப்படும் பெயர் பலகைகளே சிங்கள மொழியினை முதன்மையாக கொண்டு காணப்படுகின்றன. இதனை அவதானித்து விட்டு அண்மையில் புலம் பெயர் நாடு திரும்பிய ஒருவர், போகிறபோக்கைப் பார்த்தால் அங்கு தனிச் சிங்கள மொழிதான் பயன்படுத்தப்படும் என்று கூறி தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பெயர் பலகைகள் அனைத்தும் தமிழர்களுக்கு ஒரு செய்தியினை சொல்லுகின்றது அதாவது சிங்களவர்களுக்குக் கீழ் தான் தமிழர்கள் என்ற செய்தியினை செல்லுகிறதா? எனவும் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், வன்னிப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் உட்பட அனைத்து மாவீரர் நினைவுத் தூபிகளையும் சேதமாக்கி அழித்த சிங்களம், அங்கு தாராளமாகப் புத்த விகாரைகளை நிறுவி வருகின்றது. அத்துடன் நிற்காத சிங்களம் அங்கு படிப்படியாக மாவீரர் பெயர்களைக் கொண்டிருந்த வீதிகளின் பெயர்கள் உட்பட ஏனைய தமிழ்ப்பெயர்களை கொண்ட வீதிகளின் பெயர்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை அழித்துவிட்டு சிங்களப் பெயர்களை நிறுவி வருகின்றது.
இது தமிழ் மக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்த வீதிகளுக்கும் ஊர்களுக்கும் சிங்களப் பெயர் சூட்டுவதில் இராணுவத்தினரும் அரச அதிகாரிகளும் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வன்னியில் பல பகுதிகளிலும் ஊர்களும் வீதிகளும் சிங்களமயமாக்கப்பட்டு அங்கு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு சிங்களக் கிராமங்களாகவே அவை மாற்றப்பட்டு வருகின்றன. கடும் யுத்தத்தை சந்தித்த மக்கள் இன்னும் யுத்தத்தின் வடுக்கள் ஆற முன்னரே இந்தக் கொடுமைகளையும் காணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கடும் விசனமடைந்துள்ளனர்.
தமிழ் கிராமங்களதும் வீதிகளதும் பெயரை அபிவிருத்தி என்ற பெயரில் அரச அதிகாரிகள் சிங்ளமயமாக்க துணைபோவதாகவும் நாளடைவில் இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய செயற்பாடுகள் தற்போது ஏறாவூர்ப் பற்று செங்கலடிப் பிரதேச செயலர்பிரிவுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கலடி - பதுளை வீதியில் (ஏ5) மாஓயா சந்திக்கு 5 கிலோமீற்றர் கிழக்காக உள்ள மஞ்சள் ஆறு எனும் இடத்தில் காடுகளை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதிக்குத் தற்போது சிங்களவர்கள் மங்களகம என பெயர் மாற்றம் செய்துள்ளனர். மட்டு அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள 36,38,40 ஆகிய கொலனிகளைச் சேர்ந்த சிங்களவர்களே இவ்வாறு மேற்படி பகுதிக்கு சிங்கள அரசின் அனுமதியின் பெயரில் இந்த திட்டமிட்ட ஊடுருவலை மேற்கொண்டுவருகின்றனர்.
பெரும்பான்மையினர் இவ்வாறு அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபடுவதினால், அங்குள்ள தமிழ்பொதுமக்கள் தமது சேனைப் பயிர்ச் செய்கையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். பயிர்ச் செய்கை மாத்திரமின்றி அப்பகுதியில் உள்ள குளங்களில் மீன்பிடித் தொழிலையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் எமது பொருளாதாரம் மிகவும் பின்னடைவை எதிர்நோக்க நேரிடும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
2007 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த படுவான்கரை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 9 ஆம் கட்டை மற்றும் கெவிளியாமடு போன்ற பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொண்ட பெரும்பான்மையினர் பின்னர் கச்சக்கொடி, சுவாமிமலை பகுதிக்கு தமது திட்டமிட்ட ஆதிக்கத்தினை நகர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்தவாரம் யாழ். தீவுப் பகுதி ஊர்காவல்துறைப் பகுதியில் இடம்பெற்ற இரு அணிகளுக்கு இடையிலான உதை பந்தாட்டத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து ஒட்டுக்குழுக்களும் ஆயுததாரிகளும் இணைந்து குறித்த ஒரு அணியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதில் பல இளைஞர்கள் படுகாயமடைந்து ஊர்காவல்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குறித்த மருத்துவமனைக்கு விரைந்த ஊர்காவல்துறை பிரதேச சபைத் தலைவரும் ஒட்டுக்குழு உறுப்பினருமான காந்தன் என்பவர், படுகாயமடைந்த இளைஞர்களை அணுகி இந்த விடயம் வெளியில் வரக்கூடாது எனவும் குறிப்பாக ஊடகங்களில் வரக்கூடாது எனவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஊர்காவல்துறை காவல்துறையினரும் துணைபோனமை குறிப்பிடத்தக்கது. படுகாயமடைந்தவர்கள் அண்மையிலேயே வன்னிப்பகுதியில் இருந்து மீண்டும் தமது சொந்த இடத்திற்கு சென்று குடியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெலிஞ்சிமுனை அணி மற்றும் ஊர்காவல்துறை ரேஞ்சஸ் அணி ஆகியவற்றிற்கிடையில் ஊர்காவல்துறை மெலிஞ்சிமுனை இருதயராஜா சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற உதைபந்தாட்ட நிகழ்வின்போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளே சிங்களமும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து தமது இருப்பிற்காக அப்பாவித் தமிழ் மக்கள் மீது தமது கீழ்த்தரமான நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகின்றனர். இதனை சர்வதேசத்திடம் ஒருமித்த குரலில் எடுத்துரைக்க வேண்டியது எமது கடமையாகும். சிந்தியுங்கள் செயற்படுங்கள்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு

Friday, May 4, 2012

சம்பூர் மக்களின் வாழ்வு சூறையாடப்படுகின்றது! (45)


இன்னும் கிறீஸ் மனித விவகாரத்துக்கு முற்றுப் புள்ளிவைக்காத நிலையில், வடக்கின் பல பகுதிகளிலும் மர்ம மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் இராணுவத்தினரே தென்படும் நிலையில், சிறிலங்கா அரசு தமக்கும் இந்த விவகாரத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று 'கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிக்கும்" போக்கில் தெரிவிக்கின்றது.
இச்சம்பவம் தொடர்பாகத் தாம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக்கொண்டு, கிறீஸ் மனித விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது' சிறிலங்கா அரசு.
'நாட்டுக்குள் இராணுவ ஆட்சியை கொண்டுவர விரும்பும் இந்த அரசாங்கம், அதற்காக பாதுகாப்பு தரப்பினரையே பயன்படுத்தி வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் அப்பாவித் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அச்சத்துக்குள் தள்ளப் பார்க்கிறது' என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட ஆயர் தெரிவிக்குமளவிற்கு நிலைமை அங்கு உச்சநிலையை அடைந்துள்ளது என்பது திண்ணம்.
இந்நிலையில், தமிழ் மக்களை கிறீஸ் மனிதர்கள் பக்கம் திரம்பவைத்துவிட்டு, சிங்கள அரசு தமிழ் மக்களின் நிலங்களை சூறையாடுவதில் முனைப்புக் காட்டிவருகின்றது.
திருகோணமலை சம்பூர்ப் பகுதியில் அனல் மின்னிலையம் என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பூரில் சிங்களப் பேரினவாதத்தால் விரட்டியடிக்கப்பட்ட சம்பூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்பூர் அனல் மின்நிலையம், காங்கேசன் துறை துறைமுகம் ஆகியவற்றுக்கான உடன்படிக்கைகளை இந்தியாவால் செய்ய முடியுமென்றால் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு சிறிலங்கா  அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் ஏன் கேட்கக் கூடாது என்று சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த பூர்வீக இடங்களுக்கு திரும்ப வேண்டும் என்பதே இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்தினதும் கோட்பாடாகவுள்ளதாக இந்தியா திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கின்றது.
பொதுமக்களின் சொந்த வாழ்விடங்களாக இருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணிகளை பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக சிறிலங்காஅரசாங்கம் கூறுகின்றது.
பொருளாதார வலயத்திற்கான இடத்தை மாற்றி அமைக்கலாம். ஆனால் மக்களின் வாழ்வாதார உரிமையை மறுப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதென்று அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்குமப்பால் சம்பூர் மக்களின் மீள் குடியேற்றத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள காணிகள் பயிர்செய்கையில் ஈடுபடுவதற்கு உகந்த காணிகளாக இல்லை. அத்துடன் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ள கூடிய வசதி வாய்ப்புக்களும் இங்கு இல்லை.
குடி நீருக்கோ அன்றேல் விவசாயத்திற்காகவோ கிணறு தோண்டுவதாயின் நீருக்காக 60, 70 அடி ஆழத்திற்கு தோண்ட வேண்டியுள்ளது.
எனவே வாழ்விடத்திற்குப் பொருத்தம் இல்லாத காணிகளில் குடியேறுமாறு நிர்ப்பந்திப்பதும் குடியேற மறுக்கும் பட்சத்தில் படைத்தரப்பின் முக்கியஸ்தர்கள் உட்பட ஆளுநரும் அப்பாவி மக்கள் மீது மிரட்டல் விடுவது எந்தளவுக்கு சரியானது என்றும் சம்பூர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தப் பின்னணியில் தமது சொந்தக் காணிகளில் குடியேறுவதற்கு இந்தியா,சிறிலங்கா அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என்று கூறும் இடம்பெயர்ந்த சம்பூர் மக்கள் சிறிலங்கா அரசாங்கம் நாங்களும் இந்நாட்டு பிரஜைகள் என்று நினைக்குமாகவிருந்தால், தம்மீதான வற்புறுத்தல்களையும் பயமுறுத்தல்களையும் இனிமேல் செய்யாது நட்ட ஈட்டுடன் எமது சொந்த வாழ்விடங்களில் வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கை என்ற போர்வையில் சம்பூர் பிரதேசத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது அப்பகுதி மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்தனர்.
ஆந்தப் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்கு வழங்கப்போகின்றோம் என்பதனை சாட்டாகக் கூறி சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா, இளக்கந்தை மற்றும் கடற்கரைச்சேனையின் ஒரு பகுதி உள்ளடங்கிய சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கத்தினால் பேணப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டு மூதூர் பிரதேச செயலக புள்ளிவிபரத் திரட்டின்படி 1940 குடும்பங்களைச் சேர்ந்த 7494 பேர் வாழ்ந்து வந்துள்ளனர். பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள இப் பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் நெல் வயலும், சுமார் 1000 ஏக்கர் குடியிருப்புப் பிரதேசமும் சுமார் 2000 ஏக்கர் மேட்டு நிலமும் சுமார் 4500 ஏக்கர் காட்டுப் பிரதேசமும் காணப்படுகின்றன.
இப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்ற சம்பூர் மகாவித்தியாலயம் இன்று ஒரு கடற்படை முகாமாக உள்ளது. சம்பூர் சிறிமுருகன் வித்தியாலயம், கூனித்தீவு நாவலர் வித்தியாலயம், சூடைக்குடா பாரதி வித்தியாலயம் என்பன மூடப்பட்ட நிலையில் அழிவடைந்து கொண்டிருக்கின்றன. அப்பகுதி மாணவர்கள் பாடசாலைக் கல்வியின்றி வீதிகளில் அலைகின்றனர்.
சம்பூர் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களான சிறிபத்திரகாளி அம்பாள் ஆலயம், சம்பூர் பிள்ளையார் ஆலயம், சம்பூர் அரசடி விநாயகர் ஆலயம், சம்பூர் நாகதம்பிரான் ஆலயம், கூனித்தீவு பிள்ளையார் ஆலயம், கூனித்தீவு வடபத்திரகாளி ஆலயம், சூடைக்குடா மாரியம்மன் ஆலயம், மற்றும் இளக்கந்தை வைரவர் ஆலயம் என்பன கடந்த 6 வருடங்களாக மக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, பூiஐகள் எதுவுமின்றி சிதிலமடைந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே 500 மெகா வாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின்நிலையம் ஒன்றை சம்பூரில் அமைப்பதற்கான உடனப்படிக்கை  இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெறும் 500 மெகா வாட் மின்சாரத்திற்காக பத்தாயிரம் ஏக்கர் காணி பறிமுதல் செய்யப்பட்டு சுமார் பத்தாயிரம் தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டு அவர்களது வாழ்வும் பலியிடப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையத்திற்காக 500 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. மிகுதி 9500 ஏக்கர் பற்றி எதுவித கதையும் இல்லை. அப்பகுதி மக்கள் குடிப்பதற்குக் கூட தண்ணியில்லத காட்டுப்புறத்திலுள்ள கருங்கற் பிரதேசங்களில் குடியேறுமாறு தொடர்ச்சியாக இராணுவத்தினர் வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர் என அந்த அறிக்கை தொடர்ந்து செல்கின்றது.
தமிழ் மக்களின் இந்த அவல நிலைமையைத் தவிர்ப்பதற்கு சர்வதேசம் தான் கண்திறக்கவேண்டும்.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்!         வரும் (19.09.2011) திங்கட்கிழமை  ஜெனிவாவில் இடம்பெறும் மாபெரும் பொங்கு தமிழ் பேரணியில்   சிங்களத்தின் வன்கொடுமைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுக் குரல்கொடுப்போம் வாரீர்!
                                         (சூறையாடல்கள் தொடரும்)

சூறையாடப் புறப்பட்ட சிங்களப் பூதம்!


தமிழர் தாயகப் பகுதி எங்கும் கிறீஸ் பூதம் மற்றும் மர்ம நபர்கள் என்ற பெயரில் சிறிலங்கா அரசு, சர்வதேசத்தைத் திசைதிருப்ப நாடகம் ஆடிவருகின்றது. தமிழர் தாயகத்தின் பல பாகங்களிலும் இவ்வாறான மர்ம நபர்களின் அச்சம் தொடர்கதையாகவே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதனால் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இது வரை இராணுவத்தினரின் பிடியில் இருந்துகொண்டு பல கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சூறையாடல்களை எதிர்கொண்டிருந்த மக்கள் தற்போது அவற்றுடன் புதிய பிரச்சினை ஒன்றுக்கும் முகம் கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 தமிழ் மக்களை படுகொலை செய்வதற்கும்  அவர்களின் சொத்துக்களை சூறையாடுவதற்கும் இனி, மேலும் வசதியாக சிங்களத்திற்கு இருக்கும் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். காரணம் எதைச் செய்துவிட்டும் பழியை மர்மநபர்களாக உலாவரும் கிறிஸ் பூதங்கள் மீது சுலபமாகப் போட்டு விடலாம் என்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.
முன்னர் இருந்ததை விட தற்போது அதிகளவில் அச்சமடைந்தவர்களாகவே மக்கள் அங்கு தமது நாட்களை நகர்த்துகின்றனர்.
தட்டிக்கேட்க ஆட்கள் இல்லை என்ற நினைப்பில்  தாம் நினைத்த போக்கிற்கு சிங்களம் ஆடுகின்றது. இனித் தமிழர்களை எவ்வாறும் ஆட்டிவைக்கலாம் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பல இடங்களில் தமிழ் மக்களின் உடமைகள், பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதுடன், தமிழ் மக்கள் விரட்டியும் அடிக்கப்பட்டனர். மர்ம மனிதர்களாக வலம் வருபவர்கள் இருட்டு வேளையிலும் பொதுமக்கள் விரட்டிச்செல்லும்போது இராணுவமுகாம், கடற்படை முகாம்,  பொலிஸ் நிலையம் என்பவற்றுக்குள் வழிதவறாமல் ஓடி ஒளிந்து கொள்வதுதான் பொதுமக்களுக்கு மேலும் மேலும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மீறித் தட்டிக் கேட்க முன்வருபவர்கள் தாக்கப்படுவதுடன் சிறைகளில்  அடைக்கப்படும் சம்பவங்களும் அங்கு அதிகளவில் இடம்பெறுவதை நாம் அறியக் கூடியதாக உள்ளது.
 இந்நிலையில் கிளிநொச்சியிலும்  இந்த மர்ம மனிதர்களின் அச்சம் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பூதத்தின் அச்சம் வன்னியின் ஏனைய பாகங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால், வன்னியுட்பட்ட மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய தமிழர் தாயகப் பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல்களில் படையினரும் பொலிஸாரும் இறங்கியுள்ளனர்.
'பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நிலையே இது" என்று அவதானிகள் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் தமிழ் மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ள நிலையில் காணப்படுகின்றனர்.
சுற்றிவளைப்புத் தேடுதல் என்னும் பெயரில் தமிழ் மக்களை மேலும் மேலும் துன்புறுத்தும் நடவடிக்கையே அங்கு இடம்பெறுகின்றது.
இதேவேளை, பலரது கவனமும் கிரீஸ் பூதத்தின் பக்கம் திரும்பியுள்ள நிலையில் யாழ்.குடாவில் சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் பணியிலும் சிங்களம் முனைப்புடன் இறங்கியுள்ளதான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. இதற்கு இந்தியாவும் துணைநிற்கிறது என்பது அதைவிடக் கொடுமை.  
இந்நிலையில், யாழ். குடாநாட்டின் தீவுப் பகுதியை நோக்கி தென்பகுதியின் கவனம் திரும்பியுள்ளதாக  உள்ளூர் மீனவர்களிடையே அச்சமான சூழல் எழுந்துள்ளது. அண்மையில் புங்குடுதீவை வந்தடைந்த தெற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்தும் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் மீனவர்களிடையே சந்தேகம் வலுத்துள்ளது.
அதேவேளை, நெடுந்தீவிற்கும் தெற்கு மீனவர்கள் வருகை தரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அங்கும் குழப்பகரமான சூழலொன்றை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிப்பதற்கென கூறி நூற்றுக்கணக்கான தெற்கு மீனவர்கள் வருகை தந்து தங்கியுள்ளனர். இவர்கள் பாதுகாப்பு அமைச்சினதும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினதும் அனுமதியுடனேயே குடாநாட்டிற்கு வந்துள்ளனர்.
 இவர்களுக்கான படகுகள் மற்றும் வதிவிட உதவிகளை உள்ளூர் மீனவர்கள் வழங்கி வருகின்றனர். பெருமளவு தென்னிலங்கை மீனவர்கள் படையினரின் முகாம் சூழல்களிலும் தங்கியுள்ளனர்.
 தென்னிலங்கை மீனவர்கள் அதி கூடிய வெளியிணைப்பு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும் இதனால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் உள்ளூர் மீனவர்கள் குரல் எழுப்பத்தொடங்கியுள்ளனர்.
 அண்மையில் ஒன்று கூடிய வடபகுதிமீனவ சங்கங்கள்,தென்னிலங்கை மீனவர்களுக்கு படகுகளையோ, வதிவிடங்களையோ உள்ளூர் மீனவர்கள் வழங்கக் கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய இழுபறிகளின் மத்தியிலேயே தெற்கு மீனவர்களது கவனம் கடற்படையினரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவகப் பகுதிகளை நோக்கி திரும்பியுள்ளது. கடற்படையினரது பாதுகாப்புடன் வந்திருந்த நூற்றுக்கணக்கான தென்னிலங்கை மீனவர்கள் புங்குடுதீவு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிக்கும் தொழிலில் ஈடுபட முற்பட்டுள்ளனர்.
எனினும் இதற்கு உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து உட்பட்ட முறுகல் நிலையை தீர்க்க உள்ளூர் மீனவ சங்க பிரதி நிதிகளை கடற்படை அழைத்திருந்தது. அவ்வேளைமீனவ சங்க பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய இழுபறிகளின் மத்தியிலேயே நெடுந்தீவிலுள்ள அரச காணிகளில், தென்னிலங்கை மீனவர்களை குடியமர்த்தும் முயற்சிகள் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபடக் கூடியதாக, தொழில் உபகரணங்கள் சகிதம் இம் மீனவ குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன.
இவர்களுக்கு இந்திய வீடமைப்பு திட்ட உதவியின் கீழ் நிரந்தர வீடுகளை அமைத்து வழங்கவும் திட்டமிடப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்! வரும் 19.09.2011 ஜெனிவாவில்,சிங்களத்தின் வன்கொடுமைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுக் குரல்கொடுப்போம் வாரீர்!
  (சூறையாடல்கள் தொடரும்)

தமிழ் மக்களைக் குழப்பும் காணிப்பதிவுகள்!

தமிழர் தாயகப் பகுதி எங்கும் தமிழ்  இளம் சமுதாயங்களின் உயிர்கள் காவுகொள்ளப்படும் நிலையில், தமிழ் மக்களின் பூர்வீகம் நிலங்கள் சிங்கள இனவாதத்தால் சூறையாடப்படும் படலம் தொடர்கின்றது.
யாழ். நகரில் வரலாற்று புகழ்மிக்க பழைய பூங்கா கட்டடம் வடமாகாண சிங்கள ஆளுநர் சந்திரசிறியின் பணிப்புரையின் பேரில் இடித்துடைக்கப்பட்டுவருவதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கச்சேரியாகவும் அரச அதிபரின் வாசஸ்தலமாகவும் பாவிக்கப்பட்ட குறித்த கட்டடம் 1829ஆம் ஆண்டு யாழ். மாவட்ட அரச அதிபர் காரியாலயத்திற்கு சொந்தமானதென முன்னாள் அரச அதிபர் லைக்கினால் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது.
தற்போதைய யாழ். அரச அதிபர் காரியாலயத்திற்கு நேரெதிரே அமைந்துள்ள குறித்த பழைய பூங்கா கட்டடம் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது.
இந்நிலையிலேயே வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பணிப்பு என்று கூறி, அவரது பிரத்தியேக செயலர் தலைமையில் குறித்த கட்டடத்தின் பகுதியும் சுற்று மதிலும் கடந்தவாரம் இடிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தனக்கு எதுவும் தெரியாது. 'யாழ். மாவட்டத்தில் என்ன நடைபெறுகிறதென்றே தெரியவில்லை. எங்களையும் மீறி என்னென்னமோ நடைபெற்று வருகிறது" என பொறுப்பில்லாமல் சர்வசாதாரணமாகப் பதில் கூறியுள்ளார்.
தனக்கு ஒரு கடிதம் வந்திருந்ததாகவும் அதில் பழைய பூங்கா கட்டடத்தின் சுவர்களில் பரவிக் கிடக்கின்ற மர வேர்களை அப்புறப்படுத்தவுள்ளோம் என தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆளுநரால்  எழுதனப்பட்டிருந்ததாகவும் -
இக்கடிதம் தொடர்பான விபரங்களை ஆராய்வதற்கிடையில்  மாநகர சபையினரால் அந்த பழைய கட்டடத்தின் பல பகுதிகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன எனவும் - யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி மரபுரிமைகள் அமைச்சினால் இந்த பழைய பூங்கா கட்டடம் 'தொல்பொருள் சின்னம்' என பிரகடணப்படுத்தப்பட்டு 1722 என்னும் இலக்கத்தினையுடைய வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளிவந்திருந்த நிலையில் குறித்த கட்டடம் இடிக்கப்படுவதாகவும் ; நீலிக் கண்ணீர் வடித்துள்ள இமெல்டா சுகுமார் மேலிடத்திற்கு இவ்விடயத்தைத் தெரிவிக்கமுடியுமே தவிர என்னால் எதுவும் செய்ய முடியாது...' என்று யாழில் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஆயினும் பழைய பூங்காக் கட்டடத்தின் பெரும் பகுதி உடைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காணிப்பதிவு நடவடிக்கையினால் பொதுமக்கள் பலர் கதிகலங்கி உள்ளதுடன் பெரும் சிரமங்களையும் எதிர் நோக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்த விதமான அறிவித்தலுமின்றி கிராம சேவையாளர் ஊடாக விநியோகிக்கப்படும் படிவங்களைப் பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள், அதனை நிரப்பிக் கொடுப்பதிலேயே முனைப்புக் காட்டுகின்றனர்.
காரணமின்றி மேற்கொள்ளப்படும் இந்தப் பதிவுகள் தொடர்பாக பொதுமக்கள் கிராம சேவையாளரிடம் விளக்கம் கேட்கும் போது அவர்களும் உரிய முறையில் பதில் அளிப்பது கிடையாது.
காரணம் கிராம சேவகர்களுக்கும் இதற்கான பூரண விளக்கம் உயர் அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்பதே ஆகும். விண்ணப்பப் படிவங்களை நிரப்பி கையளிக்கும் போது காணியின் உறுதி மற்றும் விளக்கப்படங்களையும் சேர்த்து வழங்குமாறு மக்களிடம் கேட்கப்படுகின்றது. இதன்படியே விண்ணப்பப் படிவங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இதனால் யாழ். மாவட்டத்தில் காணியுள்ள பலர் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வசித்து வருவதனால் இவர்களின் உறுதிகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இந்தப் பதிவுகளை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் பல முறை வலியுறுத்தியபோதும் அரசு அதனை உதாசீனம் செய்து பதிவுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற தென்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அங்கு தமிழ் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இதேவேளை, வீதி நிர்மாணப் பணிகளுக்கான கிரவல் மண்ணினை பெற்றுக் கொள்ளவென முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாள் தோறும் தொன் கணக்கில் மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.
ஆனால் இம்மண் முல்லைத்தீவிற்கு வெளியேயும் எடுத்துச் செல்லப்படுவதாக உள்ளூர் அமைப்புக்கள் பலவும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றன.
கனிய வள திணைக்களத்திடமிருந்து அனுமதி பெற்றே முலைத்தீவில் மண் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக முல்லைதீவு அரச அதிபர் ஏ.பத்திநாதர் கூறுகிறார்.
உள்ளூர் மக்கள் கூட தமக்கு தேவையான கிரவல் மண்ணினை அவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் தெவிக்கிறார்.
ஆனால் முல்லைத்தீவில் மணல் அகழ்விற்கான அனுமதி பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த தென்னிலங்கையர்களுக்கே வழங்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் அமைப்புக்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூர் பொது அமைப்புக்களுக்கு மண் அகழ்வதற்கான அனுமதியை வழங்குவதன் மூலம் உள்ளூர் மக்களது பணம் தெற்கிற்கு செல்வதை தவிர்க்க முடியுமெனவும் பொது அமைப்புக்கள் கேள்வி எழுப்புகின்றன.
குமுழமுனைப் பகுதியில் பல ஏக்கர் நிலப் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் மண் அகழ்வு தொடர்கிறது. திட்டமிடலின்றி மேற்கொள்ளப்படும் இம் மணல் அகழ்வினால் முள்ளியவளை - குமுழமுனை வீதி இடிந்து வீழ்ந்து போகலாமென அஞ்சப்படுகின்றது. அத்துடன் வெள்ளம் தேங்கும் அபாயம் பற்றியும் எச்சரிக்கப்படுகின்றது.
இவை பற்றியெல்லாம் அங்கு நிர்வாகம் நடத்தும் ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களோ பினாமிகளோ கண்டு கொள்வதில்லையென்பதால் இந்நடவடிக்கைகளில் அவர்களது பங்கும் இருக்கலாமென பொது அமைப்புக்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.
உரிய தரப்பினரே சிந்தித்துச் செயற்படுவதன் மூலமே நாம் எமது தாயகத்தை மீட்க முடியும். சிந்தியுங்கள். செயற்படுங்கள்!
(சூறையாடல்கள் தொடரும்)

யாழ்.குடாவில் அதிகரிக்கும் அகால மரணங்கள்!




யாழ்.குடாவில் இடம்பெற்றுவரும் சமூக சீரழிவுகள் குறித்து பலதடவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். ஆயினும் யாழ்.குடாவில் சமூக சீரழிவுகள் இன்னும் தொடர்ந்து இடம்பெற்றுவருவாதக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த நத்தார் தினத்தன்று (25.12.2011) இளைஞர்கள் கும்பல் ஒன்று யாழ்.பேருந்து தரிப்பிடத்தில் நீண்ட நேரம் நின்று, அங்கே வீதியால் வந்த பெண்களுடன் தகாதமுறையில் நடந்துகொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பேருந்து தரிப்பிடத்தில் நீண்டநேரமாக இளைஞர்கள் கும்பல் ஒன்று தொலைபேசிகளுடன் நின்றதாகவும், அங்கு வரும் பெண் பிள்ளைகளிடம் தகாத வார்த்தைகள் பேசியதுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாகவும் அவர்கள்  குறிப்பிட்டனர்.

இளைஞர்களின் இந்த நடவடிக்கையால் பாதிக்கபட்ட பெண் ஒருவர் யாழ்.பேருந்து நிலைய அலுவலகத்தில் முறையிட்டதை அடுத்து, இந்த இளைஞர் கும்பல்; கலைந்துசென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இளைஞர்கள் வீதிகளில் கூடிநின்று கதைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மீறி வீதிகளில் கூடிநிற்போர் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் கோப்பாய் காவல்துறைவட்டாரங்கள் தெரிவித்துள்ளதான தகவல்கள் வெளியாகியபோதும், இளைஞர்களின் அட்டகாசம் தொடர் கதையாகவே இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டில் தற்கொலை மரணச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணத்தில் நடப்பாண்டு 36 தற்கொலையால் ஏற்பட்டுள்ள மரணச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ். பொது மருத்துவமனை மரணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலத்தினை விடவும் இத்தற்கொலை சம்பவம் அதிகரித்திருப்பதற்கு காரணமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகமாக யாழ்ப்பாணம் முழுமையாக மாறியிருப்பதும் தற்கொலை சம்பவங்களுக்கு ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தகாலபோரின்போது ஏற்பட்ட வடுக்கள் குறிப்பாக உயிரிழப்பு, அங்கவீனம், தடுப்பு முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், காணமல்போனவர்கள், யுத்தத்தின் இதுவரையும் உறவினர் இறந்தார்களா இல்லை படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்று விடை தேட முடியாத உறவுகள் போன்றவர்கள் இன்றும் போரின் கொடூரத்தில் இருந்து மீளவில்லை.

இத் தற்கொலைச் சம்பவங்களிற்கு பெரும்பாலும் தாங்கமுடியாத அதிர்ச்சி, மன அழுத்தம், விரக்தி, வாழ்க்கையில் நம்பிக்கை இன்மை, குடும்பப் பிணக்கு, எதிர்கால வாழ்வில் நம்பிக்கை இன்மை போன்றவையே காரணமாக அமைந்துள்ளன. யாழ் பொது மருத்துவமனையின் தற்கொலை மரணங்கள் தொடர்பாக பதிவுகளில் இதுவரை 12 ஆண்களும், 24 பெண்களும் தற்கொலை செய்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்.குடாவில் சிசு மரணமும் அதிகரித்துள்ளது. யாழ். இளவாலை மார்ஷன் கூடல் பகுதியிலுள்ள பற்றைக் காட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் சிசு ஒன்றின் சடலத்தை நேற்று திங்கட்கிழமை பகல் மீட்டுள்ளதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் விறகு வெட்டச் சென்றவர்கள் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிசு சிறிய பை ஒன்றில் பொதி செய்யப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகவும் குறைமாதத்தில் பிறந்த சிசுவாக இது இருக்கலாம் எனவும் காவல்துறைனர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிசுவின் சடலம் இளவாலை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இதற்கு இளவயதுக் கர்ப்பமும் காரணமாக உள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறே, மன்னார் மாவட்டத்திலும் தலைதூக்கும் கலாச்சாரச் சீரழிவுகளை தடுத்து நிறுத்துமாறு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் கீரித்தாழ்வுபாட்டுக் கடற்கரை ஓரங்களில் கலாசார சீர்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொழுதைக் கழிப்பதற்காக எந்த விதமான இடங்களும் காணப்படவில்லை.

இதனால் மக்கள் மாலை நேரங்களில் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் பல்வேறு விடயங்களிலும் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் பொழுதைக் கழிப்பதற்காக மன்னார் பிரதான பாலத்தடி மற்றும் மன்னார் கீரிதாழ்வுபாடு கடற்கரைப் பகுதி ஆகியவற்றுக்குச் சென்று வருகின்றனர். இவர்கள் குடும்பம் குடும்பமாக அங்கு சென்று பொழுதைக் கழித்துவிட்டு வருகின்றனர். ஆனால் இளைஞர்,யுவதிகள் பலர் இவ்விடங்களுக்கு வந்து நடந்து கொள்ளும் விதமோ வித்தியாசமானது.

அண்மைக்காலமாக மன்னார் பாலத்தடிப் பகுதியில் குறிப்பிட்ட சில இளைஞர், யுவதிகளின் நடவடிக்கைகள் நாகரிகமற்ற முறையில் காணப்படுகின்றன. குடும்பத்துடன் வருபவர்களையும், பார்ப்பவர்களையும் முகம் சுழிக்கச் செய்யும் விதத்தில் சில இளைஞர், யுவதிகள் நடந்து கொள்கின்றனர்.

முன்னர் ஊடகங்கள் மூலம் இந்தப் பிரச்சினை வெளிக் கொண்டுவரப்பட்டபின் சம்மந்தப்பட்டவர்கள் செயற்பட்டு குறித்த பிரச்சினையைக் கட்டுப்படுத்தினர். குறித்த பிரச்சினைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அதிகரித்து காணப்பட்டது. ஆனால் தற்போது குறித்த கலாசாரச் சீரழிவுகள் மன்னார் கீரி தாழ்வுபாடு கடற்கரையோரங்களில் அதிகரித்து காணப்படுவதாக கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். மன்னார் நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இந்தக் கடற்கரைப் பகுதிகளுக்கு அதிகமான இளைஞர், யுவதிகள் பொழுது போக்கில் அப்பகுதியில் உள்ள பற்றைக் காடுகளிலும் நடந்து கொள்கின்றனர்.

 மன்னாரில் உள்ள அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்த முற்படுகின்றபோதும் அது பயனற்றுப் போயுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.  இதனைத் தடுப்பதற்கு உரியவர்கள் தான் வரவேண்டும் பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால், எமது மக்களின் எதிர்காலம் கேள்விக்குரியதே!

புலம்பெயர்வாழ் தமிழ் மக்களே இது சிந்திக்கும் நேரமல்ல சிந்தித்து செயற்படும் நேரம்.

(சூறையாடல் தொடரும்)

.இளம் மாணவர்கள் மீது திரும்பியுள்ள சிங்களப் பார்வை!


தமிழர்களின் சொத்துக்களை தொடர்ந்து சூறையாடிவரும் சிங்களத்தின் கோரப்பார்வை தற்போது தமிழர்களின் சொத்துக்களில் ஒன்றான கல்வியை ஒடுக்குவதற்கும் இளம் மாணவர்களின் சிங்கள அத்துமீறலுக்கு எதிராக எழும் எதிர்ப்பலைகளை அடக்குவதற்கும் முனைப்புடன் திரும்பியுள்ளது.
அந்தவகையில், யாழ். பல்கலையின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 15-12-2011 வியாழக்கிழமை காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததுடன், அங்காங்கே வீசப்பட்டும் காணப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் பெயர்கள், அவர்களின் சொந்த இடங்களான மாவட்டங்கள் குறிப்பிட்டு இதில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், சில விரிவுரையாளர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டு அவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் சமாதானத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் இந்தத் துண்டுப் பிரசுரத்தில், அதனைக் குழப்ப முனையும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறான எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததை மாணவர்கள் நினைவூட்டும் அதேவேளை, இம்முறை வவுனியா வளாக மாணவர்கள் சிலரின் பெயரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
பல்கலைக் கழகத்தினுள் இருந்து தகவல் வழங்கும் புல்லுருவிகள் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளும் படைப் புலனாய்வாளர்கள், மாணவர் சக்தியை நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது இவ்வாறு அச்சுறுத்திப் பணியவைக்க முனைவதாக தெரிவித்துள்ள சிரேஸ்ட விரிவுரையாளர் ஒருவர், இவ்வாறான அச்சுறுத்தல் பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் ஒற்றுமை மற்றும் மனோ வலிமையை சிதைத்து, தமது அரச பயங்கரவாதத்தை நிலைக்கச் செய்ய அரசு எடுக்கும் முயற்சிகள் இவை என மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக சிறீலங்காப் படையினர் மற்றும் புலனாய்வாளர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுவதுடன், அவர்களுக்கு தொடர்ந்தும் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான கொலைவெறித் தாக்குதல் மற்றும் சித்த மருத்துவபீட மாணவனின் கடத்தல் என்பனவற்றுக்கு எதிராக மாணவர் காட்டிய எதிர்ப்புகளும், மாவீரர் எழுச்சி வாரத்தை ஒட்டிய நிகழ்வுகளாலும் சீற்றமடைந்திருந்த படையினரும், புலனாய்வாளர்களும் இவ்வாறு நடந்து கொள்வார்கள் என தாம் முன்னரே எதிர்பார்த்த ஒன்று என மாணவர்கள் தெரிவித்தனர்.
வன்முறையற்ற ரீதியில் தமது உரிமைக்காக குரல் கொடுக்கும் அனைவரும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டும், கொன்றொழிக்கப்பட்டும் மௌனிக்க வைக்கப்படுகின்றார்கள் என்பதற்கு மீண்டும் ஒரு புலப்படு ஆதாரமாக இந்த உயிர் அச்சுறுத் தல் பிரசுரங்கள் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலங்களிலும் சிறிலங்கா படைப்புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்தியங்கிய மாணவர்களை எச்சரித்து 'நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு" மற்றும் 'நாம் தமிழர்" என்னும் பெயரில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டதும், கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்த 'ஜேர்மனிய வாரம்" என்னும் தொனிப்பொருளிலான ஒரு கலாசாரப்பகிரல் நிகழ்வை குழப்ப 'நாம் தமிழர்" என்னும் பெயரில் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் குரல்கொடுக்கும் சக்தியாக இளைய தலைமுறை உருவாவதை தடுக்கும் நோக்குடன், தாயக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இதற்கென அனைத்துலகும் வியாபித்து பலமடைந்துள்ள புலம்பெயர் உறவுகள் ஒருமித்துக்குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும், சாத்வீக ரீதியான தாயக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் உரிமைக்கான குரலைப் பலப்படுத்தி, அவர்கள் எதிர்நோக்கும் சிறீலங்கா அரச பயங்கரவாத இன்னல்களை அகற்ற பன்னாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றும் தாம் வேண்டி நிற்பதாக மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போகும் சம்பவங்களும் யாழ்.குடாவில் அரங்கேறி வருகின்றது.
யாழ் நகரில் கடந்தவாரம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் பிரபல வணிகர் ஒருவரின் மகன் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
யாழ். பரியோவான் கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும், யாழ். அத்தியடியைச் சேர்ந்த பாக்கியராசா தனுஜன் (வயது 18) என்ற  மாணவனே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரப் பகுதியில் அமைந்துள்ள தனது தந்தையின் வியாபார நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த சமயம் அருகில் இருந்த உணவகத்திற்கு சாப்பிடச் சென்ற குறித்த மாணவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என யாழ். காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் மக்களை சீண்டும் நடவடிக்கையில் தமிழீழ தாயகப் பகுதிக்கு வெளியேயும் சிங்களம் இறங்கியுள்ளதான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் புதன்கிழமை இரவு  சிறிலங்கா கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டைக்கு அருகே உள்ள எதுராபொல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தினுள் அத்துமீறி நுழைந்த அயலூர் சிங்கள காடையர்கள்,அங்கிருந்த தமிழர்களைக்இ கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
மார்கழி மாத பஜனை வழிபாடு தொடர்பான கோயில் நிர்வாகக் குழு கூட்டமொன்றை நடத்திக்கொண்டிருந்தபோது, கோயிலுக்குள் வாள்கள் மற்றும் தடிகளுடன் நுழைந்தவர்கள் கோயில் வழிபாட்டுப் பொருட்களைத் தாக்கி, அங்கிருந்த இளைஞர்களையும் பெண்களையும் தாக்கிவிட்டுச் சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து தம்மீது இதற்குப் பின்னரும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும் தாக்குதலுக்குள்ளான பெண்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்தப் பிரதேசத்தில் அடிக்கடி இவ்வாறான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளதால் காவல்துறையினரும் தொழிற்சங்க அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும்  உள்ளூர் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலில் தமிழர்கள் 4 பேர் காயமடைந்ததாகக் கூறிய காவல்துறைப் பேச்சாளர், பிரதான சந்தேகநபர் அன்றிரவே கைதுசெய்யப்பட்டு 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆயினும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், நான் உள்ளேசென்றுவிட்டு மீண்டும் வந்து உங்கள் மீது தாக்குதல் நடத்துவேன் என்று பாதிக்கப்பட்டவர்களை அச்;சுறுத்திவிட்டுச் சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு காலத்திற்குத்தான் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் இவ்வாறு தொடரும். சிங்களவனுக்குத் துணைபோபவர்களே, சற்றுச் சிந்தியுங்கள்! எப்போது நீங்கள் திருப்பித் தாக்குவீர்கள், உங்கள் இனத்தைக் காட்டிக் கொடுப்பதை நிறுத்திவிட்டு...?
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல நாம் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டிய நேரம் இது.
(சூறையாடல்கள் தொடரும்) 

வன்னியில் முனைப்புப் பெறும் சிங்கள வன்கொடுமைகள்!


வன்னிப் பகுதியில் சிங்களப் பேரினவாதத்தின் பொதுமக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்கதையாகி வருகின்றது. இதை அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அங்கு தமிழ் மக்கள் நாளாந்தம் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டே நாட்களை நகர்த்துகின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிமண் இருந்த காலத்தில் ஒரு பெண் நள்ளிரவு வேளையில்கூட தன்னந்தனியே செல்லக் கூடியாதாக இருந்தமை உலகே அறிந்த உண்மை. ஆனால் இன்று சிங்களம் விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களை மீட்டுள்ளதாகக் கூறிவரும் நிலையில் அங்கு மக்கள் வீடுகளுக்குள்ளேயே நின்மதியாக உறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வன்னியில் இரவுப் பொழுதென்பது மிகவும் அச்சமானதாகவே கழிகின்றது.
இந்நிலையில், கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் மோசடியில் ஈடுபட்ட சிங்களவர்களைக் காப்பதற்காக அப்பகுதி மக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் உள்ள மகேந்திரம் என்பவரது கடைக்கு வருகைதந்த 4 சிங்கள இளைஞர்கள் அங்கு சில பொருட்களை வாங்கிவிட்டு மீகுதிப் பணத்தினை பெற்றுக் கொண்ட பின்னரும் மிகுதிப்பணம் தரவில்லை என்று தகராறு புரிந்துள்ளனர்.
 சம்பவ இடத்திற்கு வந்த கடை உரிமையாளரின் தம்பி மேற்படி சிங்கள இளைஞர்களுக்கு சிங்கள மொழியில்மிகுதிப்பணம் தரப்பட்டுள்ளது. பிரச்சினை செய்யாமல் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து உரிமையாளரின் தம்பியை எந்தவிதமான காரணமும் இல்லாமல் 4 சிங்கள இளைஞர்களும் தாக்கத்தொடங்கியுள்ளனர்.
இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த அங்கிருந்த சிலர் மேற்படி சிங்கள இளைஞர்களைத்திருப்பித் தாக்கத் தொடங்கியவுடன், அங்கிருந்து தப்பிச் சென்ற சிங்கள இளைஞர்கள் அருகில் உள்ள படைமுகாம் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். 20இற்குமேற்பட்ட படையினருடன் வந்து அங்கிருந்த இளைஞர்களையும், குடும்பஸ்தர்களையும் கண்மூடித்தனமாகத்தாக்கினர். இது மட்டுமல்லாமல் அயலில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்த படையினர்; வீட்டில் இருந்தவர்களையும் வெளியில் இழுத்துப் பேட்டு காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கினர்கள்.
தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் படையினரை திருப்பித் தாக்கியுள்ளனர். அங்கு நிலைமைமோசமாகவே சம்பவ இடத்திற்கு வந்த இராணுவ காவல்துறையினர்
(மில்ரிப் பொலிஸ் ) இரு தரப்பினரையும் சமாதனப்படுத்த முயன்றபோதும் படையினர் கடுமையாகத் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
படையினரின் தாக்குதல் தொடர்பாக அப்பிரதேச வாசி ஒருவர் தெரிவிக்கையில், சீருடைகளுடனும் ஆயுதங்களுடனும்வந்த இராணுவத்தினர் கையில் கிடைப்பதை எல்லாம் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனுள் அகப்பட்ட 16 வயதுச்சிறுவன் ஒருவனை வீதியில் போட்டு சப்பாத்துக் கால்களாலும் துப்பாக்கிப் பிடிகளாலும் மயக்கம் போட்டுவிழும் வரை தாக்கினர்.
இத் தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து படையினரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டு இரவு 11 மணியளவில் கடுமையாக எச்சரிக்கை செய்யப் பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த இராணுவப் புலனாய்வினர், இச்சம்பவம் தொடர்பாக வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாது. குறிப்பாக ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் தாக்குதலுக்கு இலக்கானவர்களைப் பார்த்து இராணுவத்திற்கு கைநீட்டும் அளவிற்கு உங்களுக்குபலம் வந்துவிட்டதா? நீங்கள் வீதியில் வைத்து சிங்களவனை அடிப்பீர்கள். நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம் என்று நினைத்தீர்களா? இனிவரும் காலங்களில் இவ்வாறு நடந்தால் உங்கள் அனைவரையும்சுட்டுத் தள்ளிவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர் என படைப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை விட்டுள்ளார்கள் இதனால் குறிப்பிட்ட பகுதி மக்கள் விரக்தியும் அச்சமும் அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 42 வயதுடைய உளநலம் குன்றிய பெண்ணொருவரை கடந்தவாரம் வியாழக்கிழமை இரவு அப்பகுதியைச் சேர்ந்த இருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ள கொடுமையான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 இதனால் குறித்த பெண் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அயலவரின் உதவியுடன் உடனடியாகக் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரைக் கிளிநொச்சிப் பொலிஸார் மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை கைதுசெய்து, இருவரும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். அந்த இவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, வன்னியில் கடத்தல் சம்பவங்களும் தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இளைஞர் ஒருவர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்த சில இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தடியினைச் சேர்ந்த கணேசமூர்த்தி ரதன் (வயது 23) என்ற இளைஞனே கடத்தப்பட்டவர் ஆவார்.
சம்பவ தினத்தன்று தனது வீட்டிற்கு ஆருகில் உள்ள ஆலயத்தடியினால் சென்று கொண்டிருந்த இளைஞனை வாகனத்தில் வந்த சிலர் வழிமறித்து உரையாடியுள்ளனர்.
பின்னர் வீட்டிற்குச் சென்று துவிச்சக்கர வண்டியை விட்டுவிட்டுவருமாறு கூறியுள்ளனர்.
அதன்படி வீட்டிற்குச் சென்ற இளைஞன் தான் கொண்டுசென்ற துவிச்சக்கர வண்டியை வீட்டில் விட்டுவிட்டுத திரும்பிச் செல்ல தயாரானபோது இளைஞனது தாயார் வாகனத்தில் உள்ளவர்கள் யார் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவ்விளைஞன் பேசுவதற்கு முன்னரே வாகனத்தில் இருந்தவர்கள் தாம் இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அந்த இளைஞனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் மேற்படிச் சம்பவம் தொடர்பாக முள்ளியவளைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த இளைஞன் வவுனியா ஜோசப் முகாமில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தில் இளைஞன் கடத்திச் சென்றுள்ளமை குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவிவருகின்றது.
இந்நிலையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காணாமல்போனவர் கடந்த வாரம் புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காணாமல்போன ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய சிவபாதம் உதயகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 வீட்டில் இருந்து புறப்பட்ட இவரைக் காணாத நிலையில் உறவினர்கள் காவல்துறை நிலையத்தில் முறையிட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ஊரவர்கள் தேடுதல்களை மேற்கொண்டு பார்த்தபோது, ஒட்டிசுட்டான் கற்சிலைமடுக்குளத்தில் இவரது உடலம் மிதந்து கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் வன்னிப் பகுதியில் அதிகரித்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்களுக்கு உரிய காவலர்கள்தான் முன்வரவேண்டும்.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறி எம்மையே நாம் ஏமாற்றுவதை நிறுத்தி சிங்களவனுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுப்போம்!
இது சிந்திக்கும் நேரமல்ல நாம் ஒன்றாக செயற்படும் நேரம்!
(சூறையாடல்கள் தொடரும்)