Tuesday, April 24, 2012

பூனையில்லா வீட்டில் எலி துள்ளுகின்றது! - கந்தரதன்

யாழ்குடாவில் தற்போது அரங்கேறிவரும் சம்பவங்களை நோக்கும் போது மரணம் மலிந்த பூமியாக காணப்படுவதை உணரக் கூடியதாக உள்ளது. பொருளாதாரத்தைப் பொறுத்தளவில் அங்கு நாளாந்தம் ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா போதாமையாக உள்ளது. விலைவாசி ஏற்றம் நாளும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றது. அங்கு அதிஉச்ச ரீதியில் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உளரீதியில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. பல குடும்பங்கள் யுத்தம் இடம்பெற்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டதைவிட தற்போது அதிகமாகப் பாதிக்கப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை யாழில் நாளாந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவர்களே அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் இச்சடலங்கள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அண்மையில் யாழில் மீட்கப்பட்ட சடலங்களில் பல இனந்தெரியாத முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளமை பொதுமக்களும் உறவினர்களும் வழங்கிய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. சிங்கள இனவாதத்துக்கு துணைபோவோர் மட்டுமே அங்கு வாழக்கூடியதாக உள்ளது எனவும் ஏனையவர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அச்சத்துடனேயே நாட்களை நகர்த்துகின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கொள்ளைச் சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்தே காணப்படுகின்றன. ஆட்கள் இல்லாத வீடுகள், பாதுகாப்பற்ற வீடுகள் மற்றும் ஆண் துணையற்ற வீடுகள் என நன்கு இனங்காணப்பட்டு, சிங்கள அடிவருடிகளான ஒட்டுக் குழுக்களால் கொள்ளைகள் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன.

தற்போது தாம் நினைத்ததை நிறைவேற்றுவதிலேயே அரசுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்கள் செயற்பட்டுவருகின்றன. இது பூனை இல்லாத வீட்டில் எலி துள்ளிவிளையாடுவதாய் அமைந்துள்ளது.

அதாவது கடந்தவாரம் வடமாகணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை மடக்கி யாழ் மத்திய கல்லூரியில் நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு இடையூறு விளைவித்த நூற்றாண்டு மண்டபமும் இடித்தளிக்கப்பட்டதான அதிர்ச்சிச் சம்பவம் அனைவரையும் கவலை கொள்ளவைத்துள்ளது.

வடமாகாண ஆளுனர் சந்திரசிறீ மற்றும் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளசின் இச் செயற்பாட்டிற்கு வடபகுதி கல்விச் சமூகம் கடும் அதிர்ப்தியை வெளியிட்டுள்ள அதேவேளை, ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நிதிப்பற்றாக்குறை காரணமாக முழுமையாக நிறைவேற்றப்படாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்த குறித்த நீச்சல் தடாகம் அமைக்கும் வேலைகள்,  வடமாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒதுக்கப்பட்ட 4.5 மில்லியன் ரூபாவினை வடமாகாண ஆளுனர் மடக்கிக் கொடுத்துள்ளார்.

கட்டி முடிவடைந்த மேற்படி நீச்சல் தடாகத்தினை திறந்து வைப்பதற்கு மகிந்தவை யாழுக்கு அழைத்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் பலமாக யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்றன. கல்லூரியை சுற்றி காப்பற் வீதிகள், மண்டபங்கள் வகுப்பறைகள் எல்லாம் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இவ்வாறு எல்லாவகையான ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் செய்துகொண்டிருக்கும்போது யாழ் மத்திய கல்லூரிக்கு சென்ற டக்ளஸ் நீச்சல் தடாகத்திற்கு முன்னால் உள்ள 100 வருடங்கள் பழைமை வாய்ந்த கட்டடத்தினை இடித்து மகிந்தவும் அவருடன் வருகின்ற பிரமுகர்களும் அமர்வதற்கான மேடையினை அமைக்குமாறு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவினை நடைமுறைப்படுத்த மறுத்த பாடசாலை அதிபர் அக் கட்டடத்தின் பழைமையான வரலாறுகளைக் கூறி அக்கட்டடம் வரலாற்று பொக்கிசம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தும் தொனியில் மிரட்டிய டக்ளஸ், நான் மீண்டும் வந்து பார்க்கும்போது இந்தக் கட்டடம் இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

அதன் பின்னரும் இடிக்கப்படாமல் இருந்த அக்கட்டடம், இடிந்து விழும் அபாயத்தில் உள்ள
தால் உடனடியாக இடிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் இருந்து பாடசாலைக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அக்கட்டடம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் கடும் சீற்றமடைந்துள்ள யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள், கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன், யாழ். கல்விச் செயற்பாடுகளிலும் அரசியல் தனது ஆதிக்கத்தினை கடுமையான முறையில் செலுத்தி வருகின்றது என சாடியுள்ளனர்.

இந்நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் மகிந்தவை சந்திப்பதற்காக யாழ் பெருமாள் கோவிலடிப் பகுதியில் ஒன்று கூடியிருந்தனர். இதனையறிந்த யாழ்.காவல்துறையினர், அவர்களை கலைந்து செல்லுமாறு போலியான பிடியாணைப் பத்திரமொன்றைக் காட்டி விரட்டியடித்தனர்.

இதனையடுத்து, வேலையற்ற பட்டதாரிகள் டக்ளசிடம் சென்றனர். இவர்களின் வருகையை அறிந்த டக்ளஸ், பட்டதாரிகளை நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டு, உங்களில் நூறுபேருக்கு மட்டுமே நியமனம் எனவும் நீங்கள் மகிந்தவை முன்னரே ஆதரித்திருந்தால் உங்களுக்கு நியமனம் முதலே கிடைத்திருக்கும் நீங்கள் மகிந்தவை ஆதரிக்காமல் விட்டமையினாலேயே இந்த நிலைமை என கடும் தொனியில் மிரட்டியுள்ளார்.

அத்துடன் மகிந்தவின் யாழ் வருகையையட்டி மக்களுக்கு பல கெடுபிடிகளை இராணுவத்தினரும் ஒட்டுக்குழுக்களும் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம் தமிழ் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்.
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி :ஈழமுரசு

யாழில் முளைவிடும் சிங்கள பாடசாலை! - கந்தரதன்

ஐ.நா.நோக்கி புலம்பெயர் தமிழ் உறவுகள், சிங்களத்தின் கோரத் தாண்டவத்தினை சர்வதேசத்தின் முன் அம்பலப்படுத்தக் கோரி புறப்படத் தயாராகிவரும் நிலையிலும் தமிழர் தாயகப் பகுதி எங்கும் சிங்களத்தின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. யாழ்குடாவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தொடர்பாக இப்பகுதியில் பல தடவைகள் குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக சிங்களத்தின் காய்நகர்த்தல்கள் தற்போது தீவிரம் பெற்றுள்ளன. அங்கு குடியேறிய சிங்களவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்கென பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் சிங்களம் முனைப்புக் காட்டிவருகின்றது.

யாழ் குடாநாட்டிலுள்ள நாவற்குழிப் பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களுக்காக மீண்டும் யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தினை இயங்க வைக்கும் நடவடிக்கையில் வடமாகாண ஆளுனரின் தலைமையில் படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது. யாழ் தொடருந்து நிலையத்தில் வந்திறங்கி தாம் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு தம்மை அரச காணியில் குடியமர்த்தவேண்டும் என்று தெரிவித்து யாழ் அரச அதிபருடன் விடாப்பிடியாக பல கோரிக்கைகளை விடுத்த மேற்படி சிங்களவர்கள் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துறு சிங்கவினதும் வடமாகாண ஆளுனர் சந்திரசிறியினதும் நெறிப்படுத்தலில் யாழ் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்தமை தெரிந்ததே.

மேற்படிச் சிங்களவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூற வேண்டிய யாழ் அரச அதிபர் கண்டும் காணாததுபோல் இருந்துள்ளார். இதனால் சிங்களவர்களது அத்துமீறிக்குடியேறும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றது: அதிகரித்து வருகின்றது. தமிழ் மக்களது பிரதேசங்களை கையகப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காக யாழில் குடியேறவைக்கப்பட்ட சிங்களவர்களது குடும்பங்கள் முழுமையாக இதுவரை வந்து குடியேறவில்லை. குறிப்பாக இங்கு குடியேறியுள்ள குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் இன்னமும் தென்னிலங்கையில் உள்ள பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றார்கள்.

இதுமட்டுமல்லாமல் பெரும்பாலானவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளையும் இங்கு ஆரம்பிக்கவில்லை. அவர்கள் குடியேறியுள்ள நாவற்குழி பகுதியில் பல கூடாரங்கள் மற்றும் அரை நிரந்தர வீடுகள் போடப்பட்டுள்ளபோதும் அங்கு சுழற்சி முறையிலேயே தென்னிலங்கையில் இருந்து வந்து தங்கிவிட்டுச் செல்கின்றார்கள். ஆனாலும் அவர்களுக்கான மறைமுகமான அரச உதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டே வரப்படுகின்றது.

மேற்படி சிங்களவர்களுக்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கி வரும் ஹத்துறுசிங்க மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோர் இணைந்து சிங்களவர்களின் குடியேற்றங்களை மேலும் பலப்படுத்தி இவர்களது பிள்ளைகள் யாழிலேயே கல்வி கற்பதற்காக யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான அத்துமீறல்கள் தொடர்பாக கண்டும் காணததுபோல் இருக்கும் யாழ் அரச அதிபரும் இவர்களுக்கான மறைமுகமான உதவிகளை மேற்கொண்டு வருவதுடன் தன்னை இவ்விடயத்தில் சம்பந்தப்படுத்திக் கொள்ளாதது போல் குடாநாட்டு ஊடகங்கள் முன்பாக நடந்து கொள்கின்றார்.

யாழ் மாவட்டத்தில் சிங்களவர்களுக்கான பாடசாலை ஆரம்பிக்கப்பட்டால் சிங்களவர்களது ஆதிக்கம் யாழில் மேன்மேலும் அதிகரித்துச் செல்லும். அரச காணிகளை கைப்பற்றும் அவர்களது முயற்சிகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து தமிழ் மக்களது காணிகளையும் பலவந்தமாக கைப்பற்றும் நடவடிக்கையும் ஏற்படும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வலிகாமம் வடக்கு முன்னரங்கப் பகுதியில் பலாலி படைத் தளத்தின் முன்னரங்க நிலைகளாக விளங்கும் ஒட்டகப்புலத்திலிருந்து வயாவிளான் ஊடாகத் தெல்லிப்பழைச் சந்தி வரைக்கும் அங்கிருந்து காங்கேசன்துறை வரை  நிரந்தரத் தடுப்பு வேலிகளை இராணுவத்தினர் அமைத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வலி.வடக்கில் பலாலி இராணுவத் தலைமையகத்தை அண்மித்த இடங்களில் உள்ள 23 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கான சாத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. நிரந்தர தடுப்பு வேலிகளை அமைப்பதற்கான தூண்கள் இப்போது ‘கொங்கிறீட்’ போடப்பட்டு நடப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு வேலிக்குள் 23 கிராம அலுவலர் பிரிவுகள் அடங்கி உள்ளன. 7273 குடும்பங்களைச் சேர்ந்த 26281 பேர் இப்பகுதிகளில் மீள்குடியமர்வுக்காகக் காத்திருக்கின்றனர்.

பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுவரும் பகுதிக்கு அப்பால் குறைந்தது ஒன்றரை வருடங்களுக்கு யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று படையினர் தமக்குத் தெரிவித்திருக்கின்றனர் என மக்கள் சிலர் கூறுகின்றனர். இது உறுதிப்படுத்தப்படாத போதும், முன்னரங்குகளில் நிரந்தர வேலிகள் அமைக்கப்படுவதானது மக்களின் மீள்குடியமர்வு குறித்த பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வலி. வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். போர் முடிந்ததன் பின்னர் இந்தப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள 12 கிராம அலுவலர் பிரிவுகளில் மட்டுமே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். கடந்த வருட இறுதிக்குள் எஞ்சியவர்களும் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் தெரிவித்து வந்தனர். ஆனால் 2011 மே மாதத்தின் பின்னர் எந்தவிதமான மீள்குடியமர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்டு வரும் ஒட்டகப்புலம் கட்டுவன் வீதியின் இடையே உள்ள 4 கிலோ மீற்றர் தூரமும் இந்த பாதுகாப்பு எல்லை வேலிக்குள் அடங்குவதால் அதன் புனரமைப்பு வேலைகள் கைவிடப்பட்டுள்ளன. அந்த 4 கிலோமீற்றர் வீதியையும் தனியாரின் காணிகளுக்கு ஊடாகப் புதிதாக அமைக்குமாறு படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புனரமைப்பு வேலைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே வீதிகளை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளே! நாம் சிந்திக்கும் நேரமல்ல இது. சிந்தித்து செயற்படவேண்டிய நேரம். வரும் மார்ச் 5 அன்று சிங்கள வன்கொடுமைகளுக்கு எதிராக ஜெனிவாவில் ஒருமித்துக் குரல்கொடுப்போம் வாரீர்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு

தொடர்கின்றது சிங்களத்தின் கொலைவெறி! - கந்தரதன்


இச்சம்பவத்தையடுத்து நெடுந்தீவு மக்கள் கடும் அச்சத்தின் மத்தியில் காணப்படுவது அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கிளிநொச்சியில் 16வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படைச் சிப்பாய் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பெற்றோர் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வுகளில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழ் மக்கள் குரல் எழுப்பிக்கொண்டிருந்த வேளையிலும் சிங்களக் கொடுங்கோல் இராணுவத்தினர் தமிழ் மக்களை சீண்டிச் சின்னாபின்னமாக்கி சூறையாடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்ட நிலைமை வர்ணிக்கமுடியாத கொடுமை.

நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் பாடசாலை  மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த லக்சனா வயது 13 என்ற குறித்த மாணவி கடந்த 3ம் திகதி சனிக்கிழமை காலை கடைக்குச் சென்றபின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் குறித்த சிறுமி நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் கைவிடப்பட்ட வளவு ஒன்றில் தலையில் பலமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரது சடலத்திற்கு அருகில் வெற்று மதுப் போத்தல்களும் சிறுமியின் உள்ளாடைகள் கிழித்தெறியப்பட்ட நிலையிலும் காணப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் ஒட்டுக் குழுக்களும் நெருக்கமாக வாழும் நிலையில் இராணுவத்தினரே இந்த கொடுஞ்செயலைப் புரிந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் 16 வயதான மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை மதவாச்சிக்கு அழைத்துச் சென்று அங்கு நிராதரவாக கைவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் குறித்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 16 வயதுக்குட்பட்ட பெண்களை அவர்களது சம்மதத்துடன் திருமணம் செய்தாலும் கூட அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமை. எனினும் இந்தச் சிப்பாய் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து பெற்றோர் குழப்பமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 27ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி உதயபுரம் கிழக்கைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான முத்தையா சுப்பிரமணியம் (வயது 60) என்னும் நபரே கடத்தப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிய மேற்படிக் குடும்பஸ்தர், இறுதி யுத்தத்தின் பின்னர் இரகசிய தடுப்பு முகாங்களில் வைந்திருக்கப்பட்டு பின்னர், 2010ம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

கடத்தல் சம்பவம் நடைபெற்ற தினத்தில் இரவு 9 மணியளவில் வெள்ளைநிற வாகனத்தில் மேற்படிக் குடும்பஸ்தரின் வீட்டுற்கு முன்னால் வந்திறங்கிய இனம் தெரியாத குழுவினர், விலாசம் விசாரிப்பது போல் அக் குடும்பஸ்தரை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று வீட்டு வாசலில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினரால் வவுனியா மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறான பல கடத்தல்கள், காணாமல் போதல்கள், பாலியல் வன்கொடுமைகள் நாளாந்தம் தமிழர் தாயகப் பகுதியில் சிங்களத்தினால் நாளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பல உயிராபத்துகள் கருதி அச்சத்தில் மூடி மறைக்கப்பட்டுவருகின்றன.

இதனைச் சர்வதேசம் கவனத்தில் எடுக்கவேண்டியது மிகமிக அவசியமானது. இலங்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று தமிழர்களுக்கு வதிவிட உரிமை மறுக்கும் நாடுகளே, உரிமை மறுத்து தமிழர்களை நாடுகடத்திவரும் நாடுகளே இலங்கையில் இன்றும் தமிழர்கள் மீது அரங்கேறிவரும் கொடுமைகள் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டவில்லையா?
உரியவர்களே விடை உங்களின் மனங்களில்தான். உலகெங்கும் வாழ் தமிழ் மக்களே நாம் சிந்திக்கும் நேரமல்ல இது ஒன்றுபட்டு செயற்படவேண்டிய நேரம்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு

தமிழர் பூர்வீகத்துக்கே பூட்டு! - கந்தரதன்


சிறீலங்கா இனவாத அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 24 நாடுகளால் ஆதரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் சிறீலங்காவில் சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான வன்கொடுமைகள் நின்றபாடில்லை.

அதுதொடர்கதையாகவே இருந்து வருகின்றது. வலிகாமம் வடக்கில் தொடந்தும் உயர்பாதுகாப்பு வலயங்களாகவுள்ள பகுதிகளை, படையினர் இறுக்கமான முறையில் மேலும் மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஒட்டகப்புலம் பிரதேசத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து சுமார் இரண்டரைக் கிலோ மீற்றர், அதாவது வசாவிளான் வரைக்கும் கொங்றிட் தூண்கள் நாட்டப்பட்டு முள்ளுக் கம்பி வேலிகளை படையினர் அமைத்து வருகின்றமை தெரிந்ததே.

வலிகாமம், வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இதுவரை 8 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு பகுதியும், 15 கிராம சேவகர் பிரிவுகளில் முழுமையாகவும் மீள்குடியேற்றத்திற்கான தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில், கே.கே.எஸ். தெற்கு ஜே.233, கே.கே.எஸ். மத்தி ஜே.234, கே.கே.எஸ் மேற்கு ஜே.235, குரும்பசிட்டி ஜே.242, மயிலிட்டி வடக்கு ஜே.246, தையிட்டி கிழக்கு ஜே.247, மயிலிட்டித்துறை மேற்கு ஜே.248, தையிட்டி வடக்கு ஜே.249, தையிட்டி மேற்கு ஜே.250, மயிலிட்டித்துறை வடக்கு ஜே.251, பலாலி மேற்கு ஜே.252, பலாலி கிழக்கு ஜே.253, பலாலி வடக்கு ஜே.254, பலாலி வடகிழக்கு ஜே.255, பலாலி தெற்கு ஜே.256 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்ற தடைவிதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

இந்த நிலையில் தற்போது, முட்கம்பிவேலிகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதிகளை தொடர்ந்தும் கையகப்படுத்திப் பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என பிரதேச மக்கள் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வலிகாமம் வடக்குப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு படையினரின் சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை. என்று யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வலி.வடக்குப் பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டுப் பல பிரதேசங்கள் கையளிக்கப்பட்டுள்ள போதும் அந்தப் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்த படையினர் அனுமதிக்கவில்லை.

வலி.வடக்கில் 23 கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் படையினர் அங்கு நிரந்தர பாதுகாப்புவேலியை அமைத்து வருகின்றனர். மீள்குடியமர்வு தொடர்பாக படையினரிடம் தொடர்ச்சியாகக் கேட்டு வருகின்றேன். அண்மையில் பலாலி ஆசிரியர் கலாசாலையை விடுவித்துத் தருமாறும் கோரியிருந்தேன்.

அத்துடன் மக்களின் வாழ்விடங்களை விரைவில் விடுத்து அவர்களை சொந்த இடத்தில் குடியமர்த்த உதவுமாறும் படைத் தளபதியிடம் கோரியிருந்தேன். இதற்கு அவர்கள் இதுவரையில் சாதகமானபதில் எதனையும் வழங்கவில்லை படையினர் அனுமதியளித்தால் மாத்திரமே இந்தப் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தமுடியும். படையினரின் சாதகமான பதில் கிடைக்கும் வரை எதுவும் செய்ய முடியாது என்று யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யாழ் சுழிபுரம் திருவடி நிலை கடற்கரைப் பகுதியில் சட்ட விரோதமாக கடற்படையினர் மணலை அகழ்ந்து வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளனர். ‘பொது மக்கள் தெரிவித்ததைப் போல பல இடங்களில் சட்ட விரோதமாக மணல் அகழப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

இது குறித்து உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து இத்தகைய சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்போம்` என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களிடம் உறுதியளித்தபோதும் படையினரின் அடாவடிகள் அங்கு தொடர்வதை எவராலும் தடுத்துநிறுத்த முடியவில்லை.

இதேவேளை, முல்லைத்தீவு நாயாற்றுவெளியில் அத்துமீறிக்குடியேறுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் பார ஊர்திகளில் ஏற்றிச் செல்லப்பட்டிருக்கின்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரஊர்திகளில், மீன்பிடிப்படகுகள், மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றுடன் தற்காலிக வீடுகளுக்குத் தேவையான பொருட்களையும் ஏற்றிச் சென்றிருக்கின்றனர். இதனை அறிந்த முல்லைத்தீவு மக்கள் பாரஊர்திகளை மறித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இருப்பினும் சிறீலங்கா இராணுவத்தினரின் தலையீட்டுடன் பொருட்கள் இறக்கப்பட்டு நாயாற்று வெளிப்பகுதியில் வீடுகள் அமைத்து முடிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இரு தினங்கள் இரு தொகுதிகளாக பாரஊர்திகள் முல்லைத்தீவைச் சென்றடைந்திருக்கின்றன. கடந்த புதன்கிழமை மட்டும் முப்பதிற்கும் மேற்பட்ட பாரஊர்திகள் நாயாற்று வெளியைச் சென்றடைந்திருந்தாக அந்த மக்கள் மேலும் தெரிவித்தனர்.

அதிகளவிலான மீன்கள் பிடிபடக்கூடிய முகத்துவாரத்தை அண்மித்த பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் மீன்பிடிக்க கடற்படையினரால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், அதேபகுதியில் சிங்கள மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இப்பிரதேச தமிழ் மக்களின் வாழ்வாதார தொழிலை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அடாவடித் தனம் குறித்து தாம் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டும் அதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் கணக்கெடுக்கவில்லை எனவும் இறக்கு
மதி செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கான வாடிகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலமைகள் குறித்து அவசர கூட்டம் ஒன்றை கூடி மக்களிடம் கருத்து வெளியிட்டுள்ள பிரதேசத்தின் படைத்தளபதி இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவு இதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிதாக அழைத்து வரப்பட்ட மக்களுடன் இணைந்து தொழிலில் ஈடுபடவேண்டும் இல்லாவிடில் தேவையற்ற சிக்கல்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதற்கு யார் பதில் சொல்வது? இராணுவத்தின் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு யார் முன்வருவது? சர்வதேசமே வெறும் வாய்ப்பேச்சோடு தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுவைக்காதே. செயல்வடிவத்தில்தான் தமிழ்மக்களுக்கு தீர்வுவேண்டும். உலகெங்கும் வாழ் தமிழ் உறவுகளே சர்வதேசத்தின் காதுகளுக்கு ஒருமித்துக் குரல்கொடுப்போம்! இது சிந்திக்கும் நேரமல்ல நாம் சிந்தித்து செயற்படும் நேரம்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி: ஈழமுரசு

தமிழொழிக்க தமிழரிடம் உதவி! - கந்தரதன்

ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், குழப்பமடைந்துள்ள சிங்களம் ஜெனிவா விடயம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
சிறீலங்கா அரசாங்கத்திற்கும் அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பில்லாததுபோலவே சிறீலங்காவினால் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இவ்வாறான இனவாதப் போக்குடைய அரசு சர்வதேசத்தையே ஏமாற்றுவது போன்று தகவல்களை வெளிவிடும் நிலையில் தமிழ் மக்கள் விடயத்தில் இவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதுபற்றி சர்வதேசம் புரிந்துகொள்ளும் என்பது திண்ணம்.

இந்நிலையில் பௌத்த மதபீடம் ஒன்றை உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு வட பகுதித் தமிழ் மக்களிடம் இருந்து பணம் பிடுங்கும் முயற்சியில் சிங்களம் இறங்கியுள்ளது. அநுராதபுரம் மகா மேகவன விகாரைக்கு அருகாமையில் ‘சந்தகிரி சாயா’ என்ற பெயரிலான பௌத்த பீடம் ஒன்றை அமைப்பதற்கு சிங்கள இராணுவத்தினரும் சிங்கள காவல்துறையினரும் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பொது மக்களிடம் பணம் கறக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கையில் பௌத்த மதக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு வடபகுதி மக்களிடம் இருந்து ஏன் பணம் கறக்கவேண்டும் என பொது மக்கள் தமது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளனர். கடந்த 30 வருடங்களாக சிங்கள இராணுவத்தினர் தமிழர் தாயகத்தின் மீது சர்வதேசத்தின் உதவியுடன் முடுக்கிவிட்ட இனஅழிப்பு யுத்தம் காரணமாக வடபகுதியில் ஏராளமான இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் அழிந்துள்ளன.

இவற்றைப் புனரமைப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில் தென்னிலங்கையில் பௌத்த பீடம் அமைப்பதற்காக வடக்குத் தமிழ் மக்களிடம் நிதி கறக்கப்படுகிறது. பௌத்த மகா சங்கத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ள மேற்படி மத பீடத்திற்கு பெருந்தொகையான நிதி தேவையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி கோரி  அச்சிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும்  பற்றுச் சீட்டுக்கள் வடபகுதியில் விற்கப்படுகின்றன. சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட மேற்படிபற்றுச் சீட்டு ஒன்று 100 ரூபா வீதம் விற்கப்படுகின்றது.

மேற்படி கட்டடம் அமைப்பதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட கல் ஒன்றின் விலை 50 ரூபா என்றும் ஒரு பற்றுச் சீட்டை 100 ரூபாவுக்கு வாங்குவதன் மூலம் மேற்படி மத பீடத்தை அமைப்பதற்கு 2 கற்களை அன்பளிப்புச் செய்யுமாறும் சில இடங்களில் பொதுமக்கள் வற்புறுத்தப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் வீதிகளால் செல்கின்ற பொது மக்களை மறிக்கின்ற படையினரும் காவல்துறையினரும் மேற்படி பற்றுச் சீட்டு விற்பனையில் ஈடு
படுவதை அவதானிக்க முடிவதாக பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மேற்படி மதபீடத்தை அமைப்பதற்காக வன்னியிலுள்ள வர்த்தககர்களிடம் படையினர் 5000 ரூபா வீதம் பணம் அறவிட்டு வருவதாகவும் வர்த்தகர்கள் அச்சத்தின் காரணமாக பணத்தை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது என்பதைப் போல ஏற்கனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் இவ்வாறான அராஜகங்கள் பல சிங்கள இனவாத அரக்கர்களால் அரங்கேற்றப்பட்டுவருகின்றன.

இவ்வாறே மட்டக்களப்பில் சிறீலங்கா அரசின் ஒட்டுக்குழு அமைப்பான பிள்ளையான் குழுவினரால் கப்பம் கோரும் நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து கப்பம் கோரும் நடவடிக்கையில் ஒட்டுக்குழு பிள்ளையான் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இவ்வாறு கப்பம் கோரப்படுவதாக சிறீலங்காவில் வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பிள்ளையானும் அவரது சகாக்களுமே இவ்வாறு கப்பம் கோரி வருகின்றனர். கப்பம் கோரல் அச்சுறுத்தல்களினால் பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியவில்லை என அரச சார்பற்ற நிறுவனங்கள் விசனம் தெரிவித்துள்ளன. கப்பம் வழங்காவிட்டால் கிழக்கில் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என பிள்ளையானும் அவரது சகாக்களும் எச்சரிக்கை விடுத்து வருவதாக சிங்கள நாளிதழில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் அமைந்துள்ள ஓர் அரச சார்பற்ற நிறுவனத்திற்கு பிள்ளையானும் அவரது சகாக்களும் அடிக்கடி தொலைபேசியில் கப்பம் கோரி மிரட்டல் அழைப்புக்களைவிடுத்து வருகின்றனர். சில அரச சார்பற்ற நிறுவனங்கள் வருடாந்தம் பில்லியன் கணக்கான ரூபாவினை கிழக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக செலவிட்டு வருகின்றன.

ஆயுததாரிகள் புடைசூழ பயணம் செய்யும் பிள்ளையான் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகளுக்கு பெரும் தடையாக உள்ளார் எனவும் அந்த சிங்கள நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பில் தற்போது கப்பம் கோரிக் கடத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

மட்டக்களப்பு வாகரை பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக வாகரை காவல்
துறையில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிற்றுந்து ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் குறித்த இளைஞன் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

வாகரை - பால்சேனையைச் சேர்ந்த தணிகாசலம் ஆனந்தகிசோத் என்ற 22 வயது இளைஞனே கடந்த வாரம் கைத்துப்பாக்கி முனையில் அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டுள்ளார். சிற்றுந்தில் வந்த துப்பாக்கிதாரிகள் வீட்டிற்குள் நுழைந்து தந்தை பற்றி விசாரித்ததாகவும் தந்தை வீட்டில் இல்லாததால் மகனை கடத்திச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. சர்வதேசத்தின் பார்வை சிறிலங்காவை நோக்கி இருக்கின்றபோதும் இவ்வாறான தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேசம் விரைந்து செயற்படவேண்டியதே இன்றைய தேவையாக உள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளே சர்வதேசத்தின் காதுகளுக்கு ஒருமித்துக் குரல்கொடுப்போம்! இது சிந்திக்கும் நேரமல்ல நாம் சிந்தித்து செயற்படும் நேரம்!

(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு

ஆலயங்களை அவமதிக்கும் சிங்களம்! - கந்தரதன்

சர்வதேசத்தின் பார்வை தற்போது சிறீலங்காவை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், இனவாத சிங்களத்தின் பார்வை தமிழர்களின் பூர்வீகத்தின் மீதே வீழ்ந்துகொண்டிருக்கின்றது. சாகையிலும் தமிழ் உயிர் குடித்துச் சாவேன் என்ற நிலையிலேயே சிங்களம் தற்போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், வடபகுதியில் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள், தெய்வ வாகனங்கள் தென்னிலங்கைக்கு கடத்தப்பட்டமை தொடர்பாக பல தடவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் சிங்களத்தின் பார்வை தமிழர்களின் பூர்வீக ஆலயங்களை நோக்கித் திரும்பியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் நான்கு இந்து ஆலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இரண்டு ஆலயங்களில் வாகனங்களின் தலைகள் அறுக்கப்பட்டு திருடிச் செல்லப்பட்டுள்ளன. கோப்பாய் வடக்கு பிரான்பற்று இலுப்பையடி பிள்ளையார் ஆலயத்தின் சுவாமிகாவும் வாகனங்களின் தலைகள், ஆயுதங்கள் பயன்படுத்தி அறுக்கப்பட்டு திருடிச்செல்லப்பட்டுள்ளன.

மேற்படி ஆலயத்தில் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வழமையாக வாகனசாலையில் வைத்து பூட்டப்பட்டிருக்கும். ஆயினும் அடிக்கடி வாகன சாலை திறக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டும் வந்துள்ளது. இந்நிலையில் கடந்தவாரம் மேற்படி ஆலயத்தின் வாகன சாலையைத் திறந்து வாகனங்களைத் துப்புரவுசெய்ய முற்பட்ட போது அங்கிருந்த வாகனங்களின் தலைகள் அறுக்கப்பட்டுகாணப்பட்டுள்ளது.

ஆனால் வாகனங்களில் இருந்து அறுக்கப்பட்ட தலையின் எச்சங்கள் எவையும் அங்கு இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதேபோன்ற ஒரு திருட்டுச் சம்பவம் யாழ் அச்செழுப் பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்திலும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே, வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியிலுள்ள கௌத்தந்துறைப் பிள்ளையார் ஆலயத்தின் கதவினை உடைத்து ஐம்பொன்னினாலான மிகப்பெறுமதியான பிள்ளையார் சிலை திருடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை பூஜையை முடித்துக் கொண்டு ஆலயத்தினைப் பூட்டிவிட்டு மீண்டும் மதியப் பூஜைக்காக 11மணியளவில் ஆலயத்திற்கு வந்த குருக்கள் ஆலயக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்துள்ளார்.

கதவு உடைக்கப்பட்டது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகைதந்த ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குச் சென்று பார்த்த போது ஆலயத்தின் எழுந்தருளி விக்கிரகமான ஐம்பொன்னினாலான மிகப் பழைமை வாய்ந்ததும், பெறுமதியானதுமான பிள்ளையார் விக்கிரகம் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேற்படி ஆலயம் கடந்த போரின்போது மிக மோசமாக அழிவடைந்து இருந்த நிலையில் அண்மையில் ஊர் மக்களின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், புலோலி வடக்கு முச்சந்தி ஆனைவிழுந்தான் பிள்ளையார் ஆலயத்தின் கலசங்கள் இரண்டு திருடப்பட்ட சம்பவமும் கடந்த வார முற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கலசங்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.

கடந்த 2011 டிசெம்பர் 20 ஆம் நாளும் மேற்படி ஆலயத்தின் கூரையை பிரித்து ஆலயத்தினுள் உள்நுழைந்த திருடர்களால், லட்சம் ரூபா பெறுமதியான ஆலயப் பொருட்கள் களவாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஆலய உடமைகள், விக்கிரகங்கள், வாகனங்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளமையும் சிறீலங்காப் படையினரின் காவலரண்கள் வீதிக்கு வீதி இருந்தும் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

யாழில் இவ்வாறான கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறித்து ஆலய நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளில் பல இந்து ஆலயங்களை சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் ஆலய சுற்றாடல்களையும் படையினர் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதுடன், ஆலய நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வருவதாக ஆலய நிர்வாகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறே, கிளிநொச்சி கனகாம்பிகை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அம்மன் வீதி உலாவருவதற்கு படையினர் தடை விதித்துள்ளனர்.  நீர் பாயும் இடங்களின் ஊடாக அம்மன் உலாச் செல்லுவது வழக்கம் என்றும் அழகர் வீதி எனப்படும் குளக்கட்டின் வழியாகச் சென்று கோயிலை அடைவதே மரபு என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம்  அம்மன் இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு வாயிலாக உலா வந்தபொழுது படையினர் அம்மனைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் திருவையாறு வழியாக அம்மன் கோயிலைச் சென்றடைந்தார். கடந்த இரண்டு வருடங்களின் முன்பாக அப்பகுதியில் மீள்குடியேற்றம் நடந்த பொழுதும் இரணைமடுக்குளத்தை தளமாகக் கொண்ட படையினரின் முகாங்கள் அகற்றப்படாதுள்ளன. படையினரின் இந்த முகாங்கள் ஆலயத்தின் வெளிவீதியிலும் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கனகாம்பிகைக் குளத்திற்கு மேற்காக உள்ள சாந்தபுரப்பகுதிகளில் படையினர் பாரிய முகாம்களை அமைத்து ஆயுத களஞ்சியங்களை அமைத்து சிங்கள மக்களின் பார்வைக்காக விட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் கனகாம்பிகை கண்ணகி அம்மன் ஆலயத்தின் முன்பகுதி ஊடாககுளத்தின் கரைக்கு கால் நடைமேய்ப்பதற்கும் மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கையில் மக்கள் ஈடுபடமுடியாதவாறு படையினர் தடை விதித்துள்ளனர் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் அம்மனுக்கு கும்பாபிசேகம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சிறீலங்காப்படையினர் அம்மனின் வீதி உலா வைத்தடுத்து நிறுத்தியதாக பக்தர்கள் விசனம் தெரிவித்தார்கள்.

இரணைமடுக்குளத்தின் மூலையில் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் திருப்பி அனுப்பப்பட்ட அணைக்கட்டின் வழியாக பெருமளவு தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு படையினர் அனுமதித்து வருகின்றமை மக்களை மேலும் விசனமடையவைத்துள்ளது.

இவ்வாறே, தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு வரும் புத்தபெருமான் கடந்தவாரம் குருநகர்ப் பகுதியையும் ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த ஆக்கிரமிப்புப் பணிகளில் சிறிலங்காப் படையினரே முழு மூச்சில் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அப்பகுதிப் பொதுமக்கள் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் யாழ்.கடற்கரை வீதி, குருநகர் பகுதியில் புதிதாக புத்தர் சிலையன்றை அமைக்கும் பணியில் படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த காலங்களில் பாரியளவு கடற்படை காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரமளவில் குறித்த காவலரண் அகற்றப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியை மக்களுக்கு விடுவிப்பதற்காகவே காவலரண் அகற்றப்பட்டுள்ளதாக மக்கள் நம்பியிருந்தனர். எனினும் அந்த இடத்தில் புத்தர் சிலையன்றை அமைக்கும் பணியை படையினர் ஆரம்பித்துள்ளனர். புதிய புத்தர் சிலையின் மூலம் யாழ்.கோட்டைக்கு சுற்றுலா வரும் தென்னிலங்கை மக்களைக் கவரமுடியும் எனப் படையினர் சிலர் மக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

இதேவேளை யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட இந்தப் பகுதியில் சிலை அமைப்பது தொடர்பில் சபையிடம் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என யாழ். மாநகரசபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் தென்னிலங்கையர்களின் எண்ணிக்கையினைத் தொடர்ந்து,  இனந்தெரியாத பல நபர்கள் நடமாடித்திரிகின்றார்கள் எனவும் இவர்கள் யார் என்று இனம்கண்டுகொள்ளமுடியாத நிலைகாணப்படுவதாகவும் யாழ்.தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இவற்றை எல்லாம் சிங்களம் வேடிக்கையாகவே எண்ணுகின்றது. எமது பூர்வீகம் அழிவதை நாமும் வேடிக்கை பார்ப்போமாயின் நாம் தமிழர்களே அல்ல. அனைத்துலகும் பரந்து வாழ் தமிழ் உறவுகளே. சிங்களத்தால் எமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு சர்வதேசத்தை நோக்கி ஒருமித்து குரல் கொடுப்போம். நாம் சிந்திக்கும் நேரமல்ல சிந்தித்து செயற்படும் நேரம்.
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு

.அழியும் தமிழ்க் கற்பக தரு! - கந்தரதன்

தமிழர் தாயகத்தின் அடையாள சின்னமாக விளங்குவது பனை என்கின்ற கற்பகதரு ஆகும். இந்தியா உட்பட எத்தனையோ நாடுகளில் பனை மரம் இருப்பினும். யாழ்ப்பாணப் பனைமரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. யாழ்குடாநாட்டை குறிப்பிடும் போது குறியீட்டுப் பொருளாக பனைமரத்தைக் காண்பிப்பது வழமை. அந்த வகையில் பனை மரத்தை ஊடகங்களும் யாழ் குடாநாட்டைக் குறிப்பிடுவதற்கும் இலங்கையின் வடபகுதியைக் குறிப்பிடுவதற்கும் பனை மரத்தைக் குறிப்பிடுவது நாம் அறிந்த உண்மை.
பனைமரம் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியது என்றே சொல்லலாம். தமிழர் தாயகப் பகுதிகளில் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு பனை மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.
ஆனால், இயற்கை அனர்த்தம் தவிர்ந்து கடந்தகால யுத்தம் காரணமாக மட்டும் தமிழர் தாயகப் பகுதிகளில் சுமார் 4 மில்லியன் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயினும் எஞ்சியுள்ள பனை மரங்களையும் பாதுகாக்க முடியாத நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
காலங்காலமாகவே வடபகுதி பனைவளத்தில் தென்பகுதி சிங்களத்துக்கு ஒரு கண் இருந்துவந்துள்ள நிலையில், தற்போது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி  தமிழ் மக்கள் கட்டிக்காத்து வரும் பனைவளத்தை சூறையாடும் முனைப்பில் தென்பகுதிச் சிங்களவர்கள், படையினரின் மேற்பார்வையில் பனைவளத்தை அழிக்கும் படலத்தை நடத்திவருகின்றனர்.
தமிழ் மக்களின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்த பனை வளம் இன்று அவர்களின் கண்முன்னாலேயே, தடுக்க யாருமின்றி முற்றாக அழிக்கப்பட்டு வருகின்றது.
யுத்தத்தின் பின்னர், தமிழர் தாயகப் பகுதிகளில் பனைகளின் வளர்ச்சியில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. பனைகள் உயர்ந்து வளரும் தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட உயரத்துடனேயே அவை முதிர்ச்சியடைவதாகவும் யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைக்கு, சிறிலங்கா அரசு பாவித்த இரசாயனக் குண்டுகள், பல்குழல் ஏவுகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களே காரணம் என ஆராட்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையிலேயே எஞ்சியுள்ள பனைவளத்திற்கும் சிங்கள இனவாதத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகவே உள்ளது.
இதனால், பனைவளத்தையும் பனைவள உற்பத்திகளையும் வாழ்வாதாரமாக நம்பிவாழ்ந்த தமிழ் மக்கள் வேறு தொழில்களை நாடிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இராணுவத்தினர் பனைவளத்தை அழிக்கும் நடவடிக்கைகளும் தற்போது உச்சமடைந்துள்ளன.
கைதடி வடக்கிலுள்ள காணியொன்றில் புதிதாக இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக 32 பரப்பு வரையான தனியாருக்குச் சொந்தமான பனங்காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி, பனைவளத்தை அழித்து வருகின்றனர்.
குடாநாட்டில் பனைமரங்கள் தறித்தல், அழித்தல் மற்றும் பனை மரக்காலை போன்றவற்றிற்குப் பனை அபிவிருத்திச்சபை சில கட்டுப்பாடுகளை முன்வைத்துள்ளது.
பனைமரங்கள் தறிப்பவர்கள் கிராம சேவை அலுவலர்,பிரதேச செயலாளரின் அனுமதி பெற்று அவற்றை தறிப்பதற்கான அங்கீகாரத்தை தம்மிடம் பெறவேண்டும் எனவும், தறிக்கும் பனைகளை எடுத்து செல்வதற்கு பாதை அனுமதி பெறவேண்டும் எனவும் பனை அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.
தறிக்கும் ஒவ்வொரு பனை மரத்திற்கும் குறிப்பிட்ட தொகை பணம் செலுத்துதல் மற்றும் தறிக்கப்படும் ஒவ்வொரு பனை மரத்தினதும் மீள்நடுகைக்கான ஒரு தொகை பணம் செலுத்துதல் என்பன பனை அபிவிருத்தி சபையின் புதிய கட்டுப்பாடுகளாகும்.
பொதுமக்கள் தமது காணியில் உள்ள ஒரு பனை மரத்தைத் தறிப்பதற்கு இத்தனை   சட்டதிட்டங்களை பின்பற்றவேண்டும். ஆனால், எவரின் அனுமதியின்றியும் படையினர் வகைதொகையின்றி பெருந்தொகையான பனை மரங்களைத் தறித்து அழிப்பதைப் பார்த்து மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். ஆனால், இதனைத் தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவே இவர்கள் உள்ளனர்.
சீமெந்துக் கற்களைப் பயன்படுத்தி நிலையானதாக அமைக்கப்படுகின்ற மேற்படி கைதடி இராணுவ முகாமில் கட்டுமான வேலைகள் நிறைவடைவதற்குள் தமது பிரதேசத்திலுள்ள மேலும் பல பனை மரங்கள் அழிக்கப்படலாம் என்றும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாவற்குழிக்கு அண்மையிலுள்ள அரச காணியொன்றிலும் ஏற்கனவே இது போன்ற இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கெனவே பனைவளம் அங்கு அழிக்கப்பட்டுள்ளது. நாவற்குழி குடியேற்றத்திட்டத்திலுள்ள அரச காணியிலும் தென்னிலங்கைச் சிங்களவர்களைக் குடியேற்றியுள்ளமை தெரிந்ததே. அந்தப்பிரதேசத்திலும் பெரும் எண்ணிக்கையிலான பனைவளம் அழிக்கப்பட்டே அவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். 
இதேவேளை, தமிழர் தாயகத்தில் இருந்து வளங்களைச் சுரண்டும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளில் ஒன்றாகப் பளைப் பகுதியில் இருந்தும் பனைமரங்கள் வெட்டப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் மீளக் குடியேற்றப்படாமல் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் பளையின் பெரும்பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் இருந்தே இவ்வாறு பனைமரங்கள் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.
அனேகமாக இரவு வேளைகளிலேயே பனைகள் வெட்டப்பட்டு இரவோடு இரவாக தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் உள்ள இப்பகுதியில் இடம்பெற்றுவரும் இந்தச் செயலுக்கு பின்னால் சிறிலங்காப் படையதிகாரிகள் மறைமுக ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறே மன்னார் மாவட்டத்திலும் சிறிலங்கா காவல்துறையினரின் உதவியுடன் பெரும் எண்ணிக்கையான பனைகள் அழிக்கப்பட்டு தென்பகுதிக்கு கடத்தப்படுவதாக மன்னார்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் ஆகிய கிராமங்களில் உள்ள பல ஏக்கர் கணக்கான காணிகளில் உள்ள பனை மரங்கள் சிறிலங்கா காவல்துறையினரின் ஒத்துளைப்புடன் சட்டவிரோதமான முறையில் வெட்டப்படுவதாக பனங் காணிகளின் உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கிராமங்களில் தனியாருக்குச் சொந்தமான பல ஏக்கர் கணக்கான காணிகள் உள்ளன. குறித்த காணிகளில் பல ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.
குறித்த பனை மரங்களை நம்பி பல ஏழைக் குடும்பங்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். குறித்த மக்கள் தமது வருமானத்தை ஈட்டுவதற்காக பனை மரத்தில் இருந்து விழும் ஓலைகளை வெட்டி மட்டை வியாபாரம் செய்தல், பனங்கள் உற்பத்தி, பனங்கிழங்கு, ஒடியல், பனாட்டு, வினாகிரி போன்ற வருமானம் தரக்கூடிய உற்பத்தித் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.
 இந்த நிலையில் குறித்த காணிகளுக்குள் அத்துமீறிச் செல்லும் நபர்கள் சிறிலங்கா காவல்துறையினரின்  உதவியுடன் பனை மரங்களை வெட்டி அழித்து தென்பகுதிக்கு கொண்டு செல்லுகின்றனர். இவ்வாறு சூறையாடப்படும் பனை மரங்களை சீவி அதி கூடிய விலைக்கு விற்பனைசெய்கின்றனர். இதற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினருக்கு குறித்த தொகை இலஞ்சப் பணத்தை வழங்கி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தலைமன்னார் காவல்துறையில் முறையிட்ட போதும் அவர்கள் தென்னிந்திய சினிமா பாணியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாதது போல் உள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சட்ட விரோத செயல்களை தடுக்க வேண்டிய காவல்துறையினரே சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோவது கண்டு பொதுமக்கள் பொறுமையிழந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழகம் சென்னையில் இருந்து அண்மையில் தமிழர் தாயகப்பகுதிக்கு நேரில்  சென்ற புதிய தலைமுறை தொலைக்காட்சிக் குழுவினர் அங்குள்ள மக்களின் நிலைமைகளை பல அச்சுறுத்தல்களுக்கும் தடைகளுக்கும் மத்தியில் படம்பிடித்துத் திரும்பியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் அடையாளமாக இருந்த பனைமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு இருந்த சுவடே தெரியாமல் இருப்பதனை காணொளி ஆதாரத்துடன் வெளிப்படுத்திய புதியதலைமுறைத் தொலைக்காட்சிக் குழுவினர் தமிழர் பகுதிகளில் நீக்கமற நிறைந்துவிட்ட சிங்கள இராணுவத்தினரின் பிரசன்னத்தையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர்.
வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் இருந்து தப்பித்துச் செல்லும்போது கைவிட்டுச் சென்ற கால்நடைகளும் பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டு காணாமல்போயுள்ளதையும் பறிகொடுத்த மக்களது வாக்குமூலமாக பதிவுசெய்துள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக பார்க்கும்போது இயல்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக தோன்றினாலும் அங்குள்ள தமிழர்கள் ஒருவிதமான அச்ச சூழலில் வாழ்ந்துவருகின்றதை புதியதலைமுறை தொலைக்காட்சி படம்பிடித்துக்காட்டியுள்ளது.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே. தாயகத்தில் வாழும் எம் உறவுகளின் நிலைகண்டும் காணதவர்கள் போல் இருப்போமாயின் நாம் கண் இருந்தும் குருடர்களே. வரும் மேதினத்தில் சர்வதேசத்தை நோக்கி ஓங்கிக் குரல்கொடுப்போம் வாரீர்! நாம் சிந்திக்கும் நேரமல்ல இது, செயற்படும் நேரம்.
(சூறையாடல்கள் தொடரும்)

மது விற்று கலாசாரம் வாங்கும் படையினர்! - கந்தரதன்

யாழ்.குடாவில் சிங்களத்தின் அத்துமீறல்கள் மற்றும் என்றுமில்லாத அளவிற்கு பொருட்களின் விலைகள் உச்சமடைந்துள்ள நிலையில் இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தமக்கு எப்போது விடிவு கிடைக்கும் என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர் என்பதை அங்குள்ளவர்களோடு உரையாடியபோது அறியக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் அங்கு தமிழ் இளம் சமுதாயத்தை ஏற்கெனவே தமிழ் தேசிய சிந்தனைகளில் இருந்து திசைதிருப்பி வேறுபாதையில் செல்லவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்த சிங்களக் காடையர்கள், தற்போது மதுப்பாவனையை மேலும் மேலும் இளம் சமுதாயத்தினரிடையே பரப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் வாயிலாக அறியக்கிடைத்துள்ளது.

இதனை யாழ் மதுவரி நிலையமும் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது. அதாவது யாழ்ப்பாணத்தில் அதிகளவில் மது விற்பனையாகிக்கொண்டிருக்கின்றது என்றும் யாழ் நகரவாசிகளே அதிகளவு மதுபிரியர்கள் என்றும் மிக இளவயதினர் மதுபானத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் யாழில் இருந்து வெளியிடப்பட்ட புள்ளிவிபரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மதுவரி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜனவரியில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 904 லீற்றர் மதுபான வகையும் பெப்ரவரியில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 450 லீற்றர் மதுபான வகைகளும் விற்பனையாகியுள்ளன என்று பிரதம மதுவரிப் பரிசோதகர் என்.கிருபாகரன் தெரிவித்தார்.  சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு வரும் காலங்களில் மதுபான விற்பனை அதிகரிக்கின்றன.

சுமார் 10 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 15 ஆயிரம் லீற்றர் வரையில் இத்தகைய காலங்களில் அதிகரித்து விற்பனையாகின்றது. யாழ். மதுவரி நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தென்னை பனை மரங்கள் அதிகளவில் காணப்படுவதனால் அத்தகைய இடங்களில் கள்ளு விற்பனை அதிகளவில் இடம்பெறுகிறது.

சாராயம் மற்றும் ஏனைய மதுபான வகைகளின் விற்பனையை கள்ளின் விற்பனையும் தீர்மானிக்கிறது. தற்காலத்தில் வயது வந்தவர்களுக்கு நிகராக 21 வயதுக்குட்பட்ட மாணவர்களும் தாராளமாக மது பாவிக்கிறார்கள். கடைகளில் நின்று மது அருந்தாது ரின்கள் போத்தல்களாக வேண்டிச் சென்று வீதிச் சந்திகளில் வைத்து அருந்துகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.

இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு நெடுங்கேணி மகாவித்தியாலய சிற்றூண்டிச்சாலையில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் பியர் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டையடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும்  மூடுமாறு வர்த்தகர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் இராணுவத்தரப்பினர் பியர் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை தமிழ் மக்களை விசனமடையச்செய்துள்ளது.

அங்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்த நிலையிலும் பாடசாலை விடுமுறை விடப்பட்டிருந்த தருணத்தையும் அவர்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இராணுவத்தினர் ஒரு கல்லில் இருமாங்காய் என இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என அவதானிகள் தெரிவித்தனர்.

விற்பனை நடைபெற்ற இரண்டு நாட்களிலும் வயோதிபர்களைக் காட்டிலும் இளைஞர்களே அதிகளவில் இதற்கு அடிமையாகியிருந்ததனைக் காண முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இத்துடன் வழமையாக வியாபார நிலையங்களில் விற்பனை செய்யும் விலையிலும் பார்க்க 10 ரூபா குறைவாகவே விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

தமிழினத்தை அழிப்பதற்காக துடித்துக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு அன்று யுத்தத்தினைக் கையாண்டு தமிழ் மக்களின் உயிர்களை அழித்தது. தொடர்ந்தும் சமாதானம் என்ற போர்வையில் அரசு ஆட்சியைக் கொண்டு நடத்தினாலும் எதிர்கால சந்ததியை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கிலேயே  செயற்பட்டு வருகின்றது. தற்போது தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நடைபெறுகின்ற முக்கிய நிகழ்வுகளில் இராணுவம் இந்த வெறியாட்ட வியாபாரத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றது என்றும் யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட கபடிப் போட்டியில் வெற்றி பெற்றவீரர்களுக்கு பரிசாக மதுபானப் போத்தல்கள் வழங்கப்பட்டதற்கு பெற்றோர்களும், கல்விச் சமூகத்தினரும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள மதுபான சாலைகளை மூடும் பெரும் முயற்சியில் அப் பகுதி மக்களும் பொது அமைப்புக்கள் மற்றும் கல்வி சமூகமும் பெரும் முயற்சிகளை எடுத்துவரும் இச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா படையினரின் இவ்வாறான செயற்பாடுகள் மக்களை விசனமடைய வைத்துள்ளதாகவும், இளம் சமூகத்தினரை தமிழர்களுடைய அடிப்படைப் பாரம்பரியத்தில் இருந்து மாற்றும் மறைமுக நிகழ்ச்சியே மேற்படி விளையாட்டு நிகழ்ச்சி என்றும் வீரர்களது பெற்றோர்களும், கல்வி சமூகமும் கடும் விசனம் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

வன்னியில் அங்காங்கே படையினரின் கட்டுப்பாட்டில் மதுபான கடைகள் காணப்படும் நிலையில் மதுபான கடைகளில் இளைஞர்களை தூண்டும் வகையிலான செயற்பாடுகளிலும் கடனுக்கு மதுகொடுக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இராணுவ சாகச நிகழ்வில் இராணுவத்தினர் சாதாரண உடைகளில் பியர் கான் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிகழ்வுகளைக் காண வந்தவர்களில் அதிகளவானவர்கள் பாடசாலை மாணவர்களே இதனடிப்படையில் இவர்களது செயற்பாடுகள் பல கோணங்களில் சிந்திக்க வைப்பதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டினையும் நாட்டு மக்களையும் தாம் பாதுகாத்து வருகின்றதாகவும் அவர்களது கலை கலாசாரங்கள் பாதுகாக்கப்படுகின்றதாகவும் சர்வதேச நாடுகளுக்கு அறிக்கைக்கு மேலான அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு எம்மையும் எம் இனத்தை அழித்தும், ஒழுக்கக்கட்டுப்பாட்டுடன் விளங்கிய தமிழ் மக்களின் கலாசாரத்தினைச் சிதைப்பதற்கும் கங்கணம் கட்டிக்கொண்டு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்ற ஆதங்கத்தையும் தற்போது தமிழ் மக்கள் வெளியிட்டு வருகின்றனர். இதனை சர்வதேச சமூகம் காதில் வாங்கிக்கொள்ளுமா? புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளே நாம் சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்! 
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு