Friday, May 4, 2012

சம்பூர் மக்களின் வாழ்வு சூறையாடப்படுகின்றது! (45)


இன்னும் கிறீஸ் மனித விவகாரத்துக்கு முற்றுப் புள்ளிவைக்காத நிலையில், வடக்கின் பல பகுதிகளிலும் மர்ம மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் இராணுவத்தினரே தென்படும் நிலையில், சிறிலங்கா அரசு தமக்கும் இந்த விவகாரத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று 'கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிக்கும்" போக்கில் தெரிவிக்கின்றது.
இச்சம்பவம் தொடர்பாகத் தாம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக்கொண்டு, கிறீஸ் மனித விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது' சிறிலங்கா அரசு.
'நாட்டுக்குள் இராணுவ ஆட்சியை கொண்டுவர விரும்பும் இந்த அரசாங்கம், அதற்காக பாதுகாப்பு தரப்பினரையே பயன்படுத்தி வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் அப்பாவித் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அச்சத்துக்குள் தள்ளப் பார்க்கிறது' என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட ஆயர் தெரிவிக்குமளவிற்கு நிலைமை அங்கு உச்சநிலையை அடைந்துள்ளது என்பது திண்ணம்.
இந்நிலையில், தமிழ் மக்களை கிறீஸ் மனிதர்கள் பக்கம் திரம்பவைத்துவிட்டு, சிங்கள அரசு தமிழ் மக்களின் நிலங்களை சூறையாடுவதில் முனைப்புக் காட்டிவருகின்றது.
திருகோணமலை சம்பூர்ப் பகுதியில் அனல் மின்னிலையம் என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பூரில் சிங்களப் பேரினவாதத்தால் விரட்டியடிக்கப்பட்ட சம்பூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்பூர் அனல் மின்நிலையம், காங்கேசன் துறை துறைமுகம் ஆகியவற்றுக்கான உடன்படிக்கைகளை இந்தியாவால் செய்ய முடியுமென்றால் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு சிறிலங்கா  அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் ஏன் கேட்கக் கூடாது என்று சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த பூர்வீக இடங்களுக்கு திரும்ப வேண்டும் என்பதே இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்தினதும் கோட்பாடாகவுள்ளதாக இந்தியா திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கின்றது.
பொதுமக்களின் சொந்த வாழ்விடங்களாக இருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணிகளை பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக சிறிலங்காஅரசாங்கம் கூறுகின்றது.
பொருளாதார வலயத்திற்கான இடத்தை மாற்றி அமைக்கலாம். ஆனால் மக்களின் வாழ்வாதார உரிமையை மறுப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதென்று அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்குமப்பால் சம்பூர் மக்களின் மீள் குடியேற்றத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள காணிகள் பயிர்செய்கையில் ஈடுபடுவதற்கு உகந்த காணிகளாக இல்லை. அத்துடன் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ள கூடிய வசதி வாய்ப்புக்களும் இங்கு இல்லை.
குடி நீருக்கோ அன்றேல் விவசாயத்திற்காகவோ கிணறு தோண்டுவதாயின் நீருக்காக 60, 70 அடி ஆழத்திற்கு தோண்ட வேண்டியுள்ளது.
எனவே வாழ்விடத்திற்குப் பொருத்தம் இல்லாத காணிகளில் குடியேறுமாறு நிர்ப்பந்திப்பதும் குடியேற மறுக்கும் பட்சத்தில் படைத்தரப்பின் முக்கியஸ்தர்கள் உட்பட ஆளுநரும் அப்பாவி மக்கள் மீது மிரட்டல் விடுவது எந்தளவுக்கு சரியானது என்றும் சம்பூர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தப் பின்னணியில் தமது சொந்தக் காணிகளில் குடியேறுவதற்கு இந்தியா,சிறிலங்கா அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என்று கூறும் இடம்பெயர்ந்த சம்பூர் மக்கள் சிறிலங்கா அரசாங்கம் நாங்களும் இந்நாட்டு பிரஜைகள் என்று நினைக்குமாகவிருந்தால், தம்மீதான வற்புறுத்தல்களையும் பயமுறுத்தல்களையும் இனிமேல் செய்யாது நட்ட ஈட்டுடன் எமது சொந்த வாழ்விடங்களில் வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கை என்ற போர்வையில் சம்பூர் பிரதேசத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது அப்பகுதி மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்தனர்.
ஆந்தப் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்கு வழங்கப்போகின்றோம் என்பதனை சாட்டாகக் கூறி சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா, இளக்கந்தை மற்றும் கடற்கரைச்சேனையின் ஒரு பகுதி உள்ளடங்கிய சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கத்தினால் பேணப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டு மூதூர் பிரதேச செயலக புள்ளிவிபரத் திரட்டின்படி 1940 குடும்பங்களைச் சேர்ந்த 7494 பேர் வாழ்ந்து வந்துள்ளனர். பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள இப் பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் நெல் வயலும், சுமார் 1000 ஏக்கர் குடியிருப்புப் பிரதேசமும் சுமார் 2000 ஏக்கர் மேட்டு நிலமும் சுமார் 4500 ஏக்கர் காட்டுப் பிரதேசமும் காணப்படுகின்றன.
இப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்ற சம்பூர் மகாவித்தியாலயம் இன்று ஒரு கடற்படை முகாமாக உள்ளது. சம்பூர் சிறிமுருகன் வித்தியாலயம், கூனித்தீவு நாவலர் வித்தியாலயம், சூடைக்குடா பாரதி வித்தியாலயம் என்பன மூடப்பட்ட நிலையில் அழிவடைந்து கொண்டிருக்கின்றன. அப்பகுதி மாணவர்கள் பாடசாலைக் கல்வியின்றி வீதிகளில் அலைகின்றனர்.
சம்பூர் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களான சிறிபத்திரகாளி அம்பாள் ஆலயம், சம்பூர் பிள்ளையார் ஆலயம், சம்பூர் அரசடி விநாயகர் ஆலயம், சம்பூர் நாகதம்பிரான் ஆலயம், கூனித்தீவு பிள்ளையார் ஆலயம், கூனித்தீவு வடபத்திரகாளி ஆலயம், சூடைக்குடா மாரியம்மன் ஆலயம், மற்றும் இளக்கந்தை வைரவர் ஆலயம் என்பன கடந்த 6 வருடங்களாக மக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, பூiஐகள் எதுவுமின்றி சிதிலமடைந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே 500 மெகா வாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின்நிலையம் ஒன்றை சம்பூரில் அமைப்பதற்கான உடனப்படிக்கை  இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெறும் 500 மெகா வாட் மின்சாரத்திற்காக பத்தாயிரம் ஏக்கர் காணி பறிமுதல் செய்யப்பட்டு சுமார் பத்தாயிரம் தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டு அவர்களது வாழ்வும் பலியிடப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையத்திற்காக 500 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. மிகுதி 9500 ஏக்கர் பற்றி எதுவித கதையும் இல்லை. அப்பகுதி மக்கள் குடிப்பதற்குக் கூட தண்ணியில்லத காட்டுப்புறத்திலுள்ள கருங்கற் பிரதேசங்களில் குடியேறுமாறு தொடர்ச்சியாக இராணுவத்தினர் வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர் என அந்த அறிக்கை தொடர்ந்து செல்கின்றது.
தமிழ் மக்களின் இந்த அவல நிலைமையைத் தவிர்ப்பதற்கு சர்வதேசம் தான் கண்திறக்கவேண்டும்.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்!         வரும் (19.09.2011) திங்கட்கிழமை  ஜெனிவாவில் இடம்பெறும் மாபெரும் பொங்கு தமிழ் பேரணியில்   சிங்களத்தின் வன்கொடுமைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுக் குரல்கொடுப்போம் வாரீர்!
                                         (சூறையாடல்கள் தொடரும்)

No comments: